போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் சிறையில் இருந்து தப்பி ஓடிய 'சிமி' இயக்க தீவிரவாதிகள், என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
பல்வேறு வழக்குகளில் கைதான 8 சிமி தீவிரவாதிகள் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர் . அவர்கள் இன்று அதிகாலை சிறை பாதுகாவலரை கொலை செய்துவிட்டு தப்பியோடியதாக கூறப்பட்டது. போபாலின் புறநகர் பகுதியில் உள்ள எய்ன்ட்கேதி கிராமத்தில் வைத்து நடத்தப்பட்ட என்கவுன்ட்டரில் 8 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை அறிவித்தது.
இதுகுறித்த என்கவுன்ட்டர் வீடியோ தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதில் மலை முகடு போன்ற இடத்தில் 8 தீவிரவாதிகளும் இறந்து கிடப்பதும், அவர்கள் உடல்களை காவல்துறை அதிகாரி ஒருவர் சோதனை போடும் காட்சிகளும் வீடியோவில் இடம் பெற்றுள்ளன. தீவிரவாதி ஒருவர் மீண்டும் சுடப்படும் காட்சியும் வீடியோவில் இடம் பெற்றுள்ளது. அதில் உள்ள சில செய்கைகள் சந்தேகத்திற்கு இடம் தருவதாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.