இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான உறவு நிலை சீர்கெட்டு வருவதை அடுத்து, இரு நாடுகளுக்கு இடையேயான இண்டஸ் நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே 1960-ஆம் ஆண்டு உலக வங்கியின் முயற்சியினால் இண்டஸ் நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. அதன்படி இண்டஸ் சமவெளிப்பகுதியில் உருவாகும் ஐந்து நதிகளில், பஞ்சாபிலிருந்து உற்பத்தியாகும் மூன்று நதிகளின் மேலாண்மை இந்தியா வசமும், ஜம்மு காஷ்மீர் பகுதியில் இருந்து உருவாகும் இரண்டு நதிகளின் மேலாண்மை பாகிஸ்தான் வசமும் இருக்கும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது.
இப்போது உரி ராணுவ முகாம் தாக்குதலைத் தொடந்து இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் இந்த நதிநீர் ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்யப்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது. இது தொடர்பாக இன்று செய்தியாளராக்களிடம் பேசிய வெளிவிவகாரத்துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறியதாவது:
இண்டஸ் நதிநீர் பகிர்வு ஒப்பந்தத்தை செயல்படுத்திடுவதில் இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளதை நீங்கள் அறிவீர்கள். இதை இருதரப்பினரும் பேசித்தான் தீர்த்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு கூட்டுறவு ஒப்பந்தமானாலும்,அதை நிறைவேற்றுவதற்கு சம்பந்தப்பட்ட இரு தரப்பிலும், நல்லெண்னமும் பரஸ்பர நம்பிக்கையும் வேண்டும். ஒரு தரப்பு மட்டும் இவற்றை கைக்கொண்டிருக்க முடியாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.