வரி ஏய்ப்பு தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக் கொள்வதற்கான ஒப்பந்தத்தை இந்தியாவுடன் மேற்கொள்வதற்குத் தேவையான அளவுக்கு இந்தியாவின் சட்டங்கள் வலிமையாக இருப்பதாக ஸ்விட்சர்லாந்து அரசு தெரிவித்துள்ளது.
இந்தியர்களால் ஸ்விஸ் வங்கிகளில் இயக்கப்படும் வங்கிக் கணக்குகளிலும், ஸ்விட்சர்லாந்து நாட்டவர்களால் இந்தியாவில் இயக்கப்படும் வங்கிக் கணக்குகளிலும் வரி ஏய்ப்பு உள்ளிட்ட முறைகேடுகள் கண்டறியப்பட்டால், அந்த விவரங்களை உடனுக்குடன் தன்னிச்சையாகப் பகிர்ந்துகொள்வதற்கான ஒப்பந்தத்தை இரு நாடுகளும் மேற்கொண்டுள்ளன.
அந்த ஒப்பந்ததுக்கு, ஸ்விட்சர்லாந்தின் தலைமை அதிகார அமைப்பான மத்தியக் கவுன்சில் கடந்த ஜூன் மாதம் சட்ட அங்கீகாரம் வழங்கியது.
இந்த நிலையில், அந்த ஒப்பந்தத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில், இந்த முடிவு குறித்து தனது அரசிதழில் ஸ்விஸ் அரசு விளக்கமளித்துள்ளது. அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வரி ஏய்ப்புகள் குறித்த விவரங்களை உடனுக்குடன் பரஸ்பரம் பகிர்ந்துகொள்வதற்கான ஒப்பந்தத்தை இந்தியாவுடன் மேற்கொள்ளலாம்.
அந்த ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்குத் தேவையான அளவுக்கு இந்தியாவின் தகவல் பாதுகாப்பு மற்றும் ரகசியக் காப்புச் சட்டங்கள் வலுவாக உள்ளன. தகவல்களைப் பரஸ்பரம் பகிர்ந்துகொள்ளவதற்குத் தகுதி வாய்ந்த சட்டப் பாதுகாப்பு கொண்ட நாடாக அமெரிக்காவின் வரி விதிப்புத் துறை இந்தியாவை அங்கீகரித்துள்ளது.
எனவே, அந்த நாட்டுடன் தன்னிச்சையான தகவல் பரிமாற்ற ஒப்பந்தத்தை மேற்கொள்வதில் எந்தத் தடையும் இல்லை.
அந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் மிகப் பெரிய சந்தையில், குறிப்பாக மறுகாப்பீட்டுத் துறை மற்றும் பிற நிதிச் சேவைத் துறைகளில் ஸ்விட்சர்லாந்து நிறுவனங்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று அரசிதழில் ஸ்விஸ் அரசு குறிப்பிட்டுள்ளது. இந்தியாவுக்கும், ஸ்விட்சர்லாந்துக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் அடுத்த ஆண்டு (2018) அமலுக்கு வந்து, 2019}ஆம் ஆண்டு முதல் தகவல் பரிமாற்றங்கள் தொடங்கும்.
இந்தியாவில் சட்டவிரேதமாக ஈட்டப்பட்ட பெருமளவு கருப்புப் பணம், ஸ்விஸ் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.