

புதுதில்லி: யோகாவை நாடு முழுவதும் பள்ளிகளில் கட்டாய பாடமாக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவினை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
பாரதிய ஜனதாவைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாயா மற்றும் தில்லி பாஜக செய்தி தொடர்பாளர் ஜே.சி.சேத் ஆகிய இருவரும் உச்ச நீதிமன்றதில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர்.அதில் அவர்கள் கூறியுள்ளதாவது:
தன்னுடைய மக்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை கிடைப்பதை உறுதி செய்வது அரசின் கடமை ஆகும். அதிலும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் உடல்நலத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். அதற்காக தேவையான திட்டங்களை அரசு வகுக்க வேண்டும்.
எனவே அடிப்படை ஆரோக்கிய உரிமையை பேணிக்காப்பதற்கு நாடு முழுவதும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு யோகாவினை பயிற்றுவிக்க வேண்டும். இதனை பிரபலப்படுத்தவும், பரப்பவும் 'தேசிய யோகா கொள்கை வகுக்கப்பட வேண்டும்.
இது தொடர்பாக மத்திய மனித வளத்துறை அமைச்சகம் மற்றும் பாடத்திட்ட வடிவமைப்பு அமைப்புகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு நவம்பர் 29-ஆம் தேதி இந்தவழக்கில் ஒரு மனுவினை தாக்கல் செய்த மத்திய அரசு, குறிப்பிட்ட மனுவினை தங்கள் சார்பின் பதிவாக கருதுமாறு கோரி, அது தொடர்பாக முடிவெடுத்து அறிவிக்குமாறு கோரியது.
இந்த வழக்கில் நீதிபதி லோகுர் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அதில் 'இது தொடர்பான விஷயத்தில் அரசுதான் முடிவெடுக்க முடியும் என்றும், பள்ளியில் என்ன நடத்தப்பட வேண்டும் என்பதனை நாங்கள் கூற முடியாது. அது எங்களது வேலையும் அல்ல. மேலும் பள்ளிகளில் என்ன பாடமாக நடத்தபட வேண்டும் என்பது அடிப்படை உரிமையும் அல்ல' என்று தெளிவுபடுத்திய நீதிமன்றம் இந்த வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.