எல்லையில் பதற்றம்: இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் லடாக் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் புதன்கிழமை நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தினர். லே பகுதியில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
Published on
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் லடாக் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் புதன்கிழமை நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தினர். லே பகுதியில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
முன்னதாக, இந்தியப் பகுதியான லடாக் பிரதேசத்தில் இருக்கும் நான்காம் விரல் மற்றும் ஐந்தாம் விரல் பகுதிக்குள் சீன ராணுவ வீரர்கள் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் 9 மணி வரை இருமுறை அத்துமீறி இந்தியப் பகுதிக்குள் நுழைந்தனர். அங்கு பாதுகாப்புப் பணி மேற்கொண்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள், மனிதச் சங்கிலி அமைத்து அவர்களைத் தடுக்க முயற்சித்தனர்.
இதையடுத்து, கோபமடைந்த சீன வீரர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு இந்திய வீரர்களும் கற்களை வீசியதில், இருதரப்பிலும் சிலர் காயமடைந்தனர். இறுதியில் சீன வீரர்கள் இந்தியப் பகுதியில் இருந்து விரட்டப்பட்டனர்.
இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, சிக்கிம் மாநிலம் டோக்லாம் எல்லையில் இரு நாடுகளும் வீரர்களைக் குவித்துள்ள நிலையில், இப்போது லடாக்கிலும் சீன வீரர்கள் அத்துமீறியது பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதில் நான்காம் விரல் பகுதிக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது.
இந்நிலையில், இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் சந்தித்து இந்த விவகாரம் தொடர்பாக பேச்சு நடத்தினர். காஷ்மீரின் லே-யின் சுசுல் பகுதியில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. லடாக் எல்லையில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் இந்தப் பேச்சு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, 'அரசு கருத்துக் கூறும் அளவுக்கு இது பெரிய விவகாரம் அல்ல' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com