புதுதில்லி: தில்லியில் பிறந்த சில நாட்களே ஆன குழந்தை உயிருடன் இருந்த போதே இறந்துவிட்டது என அறிவித்த மருத்துவமனையின் உரிமத்தை அம்மாநில அரசு ரத்து செய்துள்ளது.
தில்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் வர்ஷா என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். வர்ஷாவிற்கு கடந்த நவம்பர் 30-ம் தேதி ஆ ண் மற்றும் பெண் என இரு குழந்தைகள் பிறந்தது. பெண் குழந்தை பிறந்த உடனே இறந்து விட்டது.
பின்னர் சிகிச்சையிலிருந்த ஆண் குழந்தையும் உயிரிழந்துவிட்டது என அந்த மருத்துவமனை டாக்டர்கள் வர்ஷாவின் கணவர் ஆசிஷிடம் பிளாஸ்டிக் உறை ஒன்றில் சுருட்டி ஒப்படைத்துவிட்டனர். குழந்தைகளுக்கு இறுதிச் சடங்கு செய்வதற்கு கொண்டு சென்ற போது ஆண் குழந்தையின் உடலில் அசைவு காணப்படுவதை, உறவினர் ஒருவர் கண்டறிந்தார்.
உடனடியாக குழந்தை வேறொரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. குழந்தைக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பெற்றோர்கள் தரப்பில் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும் தங்கள் விசாரணையைத் துவங்கினர்.
இதனிடையே மேக்ஸ் மருத்துவமனை நிர்வாகம் சம்பந்தப்பட்ட மருத்துவரை பணி நீக்கம் செய்தது. இவ்விவகாரம் பெரிதானதைத் தொடர்ந்து தில்லி அரசு விசாரணைக்காக குழு ஒன்றை நியமனம் செய்தது. விசாரணை முடிவில் மருத்துவமனை நிர்வாகம் பிறந்த குழந்தைகளுக்கு சிகிச்சை தொடர்பாக விதிமுறைகளை பின்பற்றவில்லை என்பது தெரியவந்தது.
உடனடியாக தில்லி மாநில அரசு மேக்ஸ் மருத்துவமனை உரிமத்தை ரத்து செய்துள்ளது. இதற்கிடையே வேறொரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஆண் குழந்தை தொற்று மற்றும் பிற மருத்துவ பிரச்சினைகள் காரணமாக உயிரிழந்தது பெற்றோருக்கு சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது .