ராஞ்சி: ஜார்கண்ட்டில் வசிக்கும் ஆதிவாசித் தம்பதிகளுக்கு ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் எம்.எல்.ஏ சைமன் மாராண்டி 'முத்தத் திருவிழா' நடத்திய சம்பவத்தின் காரணமாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்று ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா. இக்கட்சியின் சார்பாக லித்திபரா தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர் சைமன் மாராண்டி. இவர் தனது தொகுதிக்குட்பட்ட தலபரி கிராமத்தில், சனிக்கிழமை இரவு ஆதிவாசித் தம்பதிகளுக்கு என 'முத்தத் திருவிழா' ஒன்றினை நடத்தியுள்ளார். இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் முக்கிய தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஸ்டீபன் மாராண்டியும் கலந்து கொண்டுள்ளார்.
நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்தப் போட்டியில் மூன்று ஆதிவாசித் தம்பதிகள் பரிசு பெற்றுள்ளனர். இது தொடர்பான செய்திகள் இன்று காலை உள்ளூர் செய்தித்தாள் ஒன்றில் வெளிவந்த பிறகுதான் தகவல் வெளியில் பரவியது.
இது தொடர்பாக செய்தியாளர்கள் சைமன் மாராண்டியிடம் கேட்ட பொழுது, அவர் கூறியதாவது:
ஆதிவாசி மக்களிடம் அன்பையும் நவீனத்துவத்தையும் உணடாகவே இந்த 'முத்தத் திருவிழா' நடத்தப்பட்டது. பொதுவாகவே ஆதிவாசி மக்கள் மிகுந்த தயக்கமும், கூச்ச சுபாவமும் உடையவர்கள். அதனைக் களையவே இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதன்மூலம் தம்பதிகள் ஒருவரை ஒருவர் ஒருவர் புரிந்து கொள்ளவும், இதன் காரணமாக விவகாரத்துகளைக் குறைக்கவும் உதவுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆனால் பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா இதனைக் கடுமையாக விமர்சித்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர் ரமேஷ் புஷ்கர் கூறும் பொழுது, 'ஆதிவாசி மக்களிடையே தயக்கத்தினைப் போக்குவதற்கு என்று எவ்வளவோ வழிகள் உள்ளது. ஆனால் இந்த செய்கையானது அவர்களின் கலாசாரத்தினைக் கேலி செய்வதாக அமைநதுள்ளது என்று தெரிவித்தார்.