நாதுலா வழியாக மானசரோவர் யாத்திரை: சீனாவுடன் மத்திய அரசு பேசி வருகிறது- மாநிலங்களவையில் தகவல்

இந்திய பக்தர்கள் நாது லா கணவாய் வழியாக கைலாச மானசரோவர் யாத்திரையை மேற்கொள்வது தொடர்பாக சீனாவுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக
Updated on
1 min read

இந்திய பக்தர்கள் நாது லா கணவாய் வழியாக கைலாச மானசரோவர் யாத்திரையை மேற்கொள்வது தொடர்பாக சீனாவுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திபெத்தில் அமைந்துள்ள கைலாச மலையையும், மானசரோவர் ஏரியையும் தரிசிக்க இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள்யாத்திரை மேற்கொள்கின்றனர். அவர்கள் உத்தரகண்ட் மாநிலம் வழியாக அங்கு சென்றடைவதே வழக்கமாக இருந்து வந்தது. 
இதனிடையே, சிக்கிம் மாநிலம் சென்று அங்கிருந்து நாதுலா கணவாய் வழியாகச் செல்லும் புதிய பாதை பயன்பாட்டுக்கு வந்தது. எனினும், டோக்கா லாம் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, நாதுலா வழியாக யாத்திரை மேற்கொள்வதற்கு சீனா தடை விதித்தது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் வியாழக்கிழமை எழுத்துமூலம் அளித்த பதில் வருமாறு:
இந்திய பக்தர்கள் நாது லா கணவாய் வழியாக இந்த ஆண்டில் கைலாச மானசரோவர் யாத்திரையை மேற்கொள்ளவில்லை. இதற்கு அங்கு யாத்திரை மேற்கொள்ள இயலாத அளவுக்கு சாதகமற்ற சூழ்நிலை நிலவுவதாக சீன அரசு சுட்டிக் காட்டியதே காரணம். 
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுடன் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இரு வாரங்களுக்கு முன் தில்லியில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்திய பக்தர்கள் நாதுலா வழியாக கைலாச மானசரோவர் யாத்திரை மேற்கொள்வது தொடர்பான விஷயத்தை சுஷ்மா எழுப்பினார்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு, சீன அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சீன வெளியுறவுத்துறை அமைச்சர் இந்த மாதம் இந்தியா வந்திருந்தபோது வெளியுறவு அமைச்சகமும் அவரிடம் இந்த விஷயத்தை எழுப்பியது என்று அமைச்சர் வி.கே.சிங் தனது பதிலில் தெரிவித்தார்.
2016-17-இல் ஆள்தேர்வில் சரிவு: இந்நிலையில், மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட மற்றொரு கேள்விக்கு மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துமூலம் அளித்த பதில்:
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி), பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி), ரயில்வே தேர்வுப் பிரிவுகள் (ஆர்ஆர்பி) ஆகிய அமைப்புகளால் கடந்த 2015-16ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1,11,807 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை 2016-17இல் 1,00,933-ஆகச் சரிந்து விட்டது என்று அவர் தனது பதிலில் தெரிவித்தார்.
அரசுத்துறைகளுக்கு எதிராக 36 லட்சம் மனுக்கள்: இதனிடையே, அமைச்சர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட இன்னொரு கேள்விக்கு எழுத்துமூலம் அளித்த பதிலில் 'கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இந்த ஆண்டு (2017) நவம்பர் 30-ஆம் தேதி வரை அரசுத் துறைகளுக்கு எதிராக மக்களிடம் இருந்து 36 லட்சம் மனுக்கள் வந்துள்ளன. அவற்றில் 97.31 சதவீத மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டு விட்டது. 42,057 மனுக்கள் கடந்த 60 தினங்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன' என்று குறிப்பிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com