நல்லெண்ண நடவடிக்கையாக தங்கள் நாட்டு சிறைகளில் இருந்து 145 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுதலை செய்துள்ளது. இவர்கள் அனைவரும் வழி தவறி பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் சென்ற மீனவர்கள் ஆவர்.
குல்பூஷண் ஜாதவின் தாய் மற்றும் மனைவி பாகிஸ்தானில் நடத்தப்பட்ட விதம் குறித்து பெரும் சர்ச்சை நிலவி வரும் நிலையில், அந்நாடு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
மீனவர்கள் விடுதலை தொடர்பாக கடந்த வாரம் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் முகமது பாஸில் ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில், 'வரும் ஜனவரி 8-ஆம் தேதி வரை இரு கட்டங்களாக 291 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, காரச்சியில் இருந்து வியாழக்கிழமை பலத்த பாதுகாப்புடன் இந்திய மீனவர்கள் 145 பேர் லாகூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கல் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று பாகிஸ்தான் தரப்பு கூறியுள்ளது.
முன்னதாக, விடுவிக்கப்பட்ட இந்திய மீனவர்களுக்கு பாகிஸ்தானில் செயல்படும் ஏதி அறக்கட்டளை சார்பில் பணமும், பரிசுப் பொருள்களும் அளிக்கப்பட்டன. ஏதி அறக்கட்டளை இந்திய மீனவர்களுக்கு உதவுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. மீதமுள்ள 146 மீனவர்களும் வரும் ஜனவரி 8-ஆம் தேதி விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் மீனவர்களும் இந்திய எல்லைக்குள் தவறி வந்துவிடுவது வழக்கமாக உள்ளது. உரிய விசாரணைக்குப் பிறகு அவர்களும் குறிப்பிட்ட கால இடைவேளையில் தாய்நாட்டுக்குத் திரும்பி அனுப்பப்படுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.