மும்பை: தேசிய காதி கிராம தொழில்கள் ஆணையம் இந்த ஆண்டு வெளியிட்டுள்ள டைரி மற்றும் சுவர் காலண்டர்களில் வழக்கமாக இடம் பெறும் காந்தியின் படத்திற்கு பதிலாக பிரதமர் மோடியின் படம் இடம் பெற்றுள்ள விவகாரம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் தேசிய தேசிய காதி கிராம தொழில்கள் ஆணையத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் டைரி மற்றும் சுவர் காலண்டர்கள் வழங்கபடுவது வழக்கம். அவற்றில் எல்லாம் இதுவரை காந்தி ராட்டையில் நாள் நூற்கும் படம்தான் இடம் பெற்றிருக்கும்.ஆனால் இந்த முறை ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட டைரி மற்றும் சுவர் காலண்டர்களில் பிரதமர் மோடியின் படம் இடம் பெற்றிருந்தது.
தனது வழக்கமான பைஜாமா குர்தா அணிந்து வேறு ஒரு புதிய ராட்டையில் மோடி நூற்பது மாதிரியான படம் இடம் பெற்றிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் தங்ககளது எதிர்ப்பை அமைதியாக காட்டும் விதமாக வியாழனன்று மதிய உணவு இடைவேளையின் பொழுது தங்களது வாயில் கறுப்புத் துணியைக் கட்டிக்க கொள்வது என்று முடிவு செய்து அறிவித்துள்ளனர்.