புது தில்லி: மேற்கு வங்கத்தில் இருந்து தில்லி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் ஏசி இயங்காததால் பேப்பர்களை விசிறியாக்கி பயணிகள் விசிறிக் கொண்டு வந்த விடியோ வைரலானது.
விமானத்தில் குளிர்சாதனப் பெட்டி இயங்காததால் கடும் அதிருப்திக்குள்ளான பயணிகள் கடும் கூச்சலிட்டனர். எனினும் 168 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் நேற்று பத்திரமாக தில்லியில் தரையிறங்கியது.
இந்த சம்பவம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நேர்ந்தது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம் என்கிறது ஏர் இந்தியா.
விமான பயணத்தின் பாதுகாப்பு குறித்து வழங்கப்படும் துண்டு பிரசுரம், நாளிதழ், விமான டிக்கெட் போன்றவற்றை பயணிகள் விசிறியாக்கி, விசிறிக் கொண்டு வந்த காட்சி டிவிட்டரில் வேகமாகப் பரவியது.
சிலர் ஏர் இந்தியா குறித்து டிவிட்டரில் நேரடியாகவே புகார்களையும் பதிவு செய்தனர்.
ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஏராளமான பயணிகள் ஏசி வேலை செய்யாதது குறித்து புகார் அளித்தனர். விமானம் புறப்படும் போதே தாங்கள் ஊழியர்களிடம் தெரிவித்தோம். சிறிது நேரத்தில் ஏசி இயங்கும் என்று கூறினார்கள். ஆனால் கடைசி வரை செயல்படவில்லை என்று பயணிகள் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாரிடம் விற்க மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக வந்த செய்தியைத் தொடர்ந்த இந்த சம்பவம் நடந்திருப்பதால், இரண்டையும் இணைத்து மீம்ஸ்களும் வெளியாகி வருகின்றன.