
புதுதில்லி: நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்புக்கு, தடை விதித்த உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய, உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
கால்நடைச் சந்தைகளில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்கவும், வாங்கவும் தடை விதித்து கடந்த மே 23 ஆம் தேதி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு நாடு முழுவதும் அரசியல் கட்சியினரும், பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.
இந்நிலையில் கால்நடைகளை இறைச்சிக்காக சந்தைகளில் விற்க மத்திய அரசு விதித்துள்ள தடையை நீக்கக் கோரி, மதுரையைச் சேர்ந்த எஸ்.செல்வகோமதி மற்றும் பி.ஆஷிக் இலாஹி பாவா ஆகியோர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இரு வேறு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்திருந்தது. இதே போல இறைச்சிக் கூடங்களின் உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவானது இன்று தலைமை நீதிபதி ஜெ.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மத்திய அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், மனுதாரர்கள் சார்பில் காங்கிரஸின் பிரபல வழக்கறிஞர் கபில் சிபல் ஆகியோர் ஆஜராகினர்
அப்பொழுது வேணுகோபால் நீதிமன்றத்தில், 'மத்திய அரசின் இந்த அறிவிப்பு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ஏற்கனவே தடை விதித்த விட்டது. எனவே புதிதாக எந்த ஒரு தடை உத்தரவும் பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. அத்துடன் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களுக்கு ஏற்ப இந்த அறிவிப்பில் நிறைய மாறுதல்களை செய்து, புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட மத்திய அரசு ஆலோசித்து வருகிறது' என்று தெரிவித்தார்.
மத்திய அரசின் இந்த வாதத்தினை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி தலைமையிலான் அமர்வானது, உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்ததோடு, வழக்கினை முடித்து வைத்தும் உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.