கொல்கத்தாவின் மையப்பகுதியில் பிரபலமான 'குவேஸ்ட்' ஷாப்பிங் மால் செயல்பட்டு வருகிறது. இங்கு சனிக்கிழமை நடந்த நிகழ்வில் வேட்டி மற்றும் குர்தா அணிந்து சென்ற நபருக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
பின்னர் அங்கிருந்த பாதுகாவலர்களுடன் அவர் ஆங்கிலத்தில் வாக்குவாதம் செய்தார். இதையடுத்து அந்தப் பாதுகாவலர்கள் 'வாக்கி-டாக்கி'யில் யாரிடமோ தொடர்பு கொண்ட பின்பு அவரை உள்ளே அனுமதித்துள்ளனர்.
பாரம்பரிய உடை அணிந்து சென்றவருக்கு இதுபோன்று பொது இடத்தில் அனுமதி மறுக்கப்பட்ட விஷயம் வேதனை அளிக்கிறது. மேலும் அவர் ஆங்கிலத்தில் பேசிய பின்பு உள்ளே அனுமதிப்பது அந்நிய மோகத்தையும், இன வெறியையும் காட்டுவதாக உள்ளது என அந்த நபரின் தோழி தெரிவித்தார்.
இதுகுறித்து அந்த நபரின் தோழியும், வங்க மொழி நடிகையுமான தப்லீனா சென் கூறியதாவது:
நாங்கள் இருவரும் அந்த ஷாப்பிங் மாலின் உள்ளே செல்லும் போது, அங்கிருந்த பாதுகாவலர்கள் எங்களை தடுத்து நிறுத்தினர். மேலும், அங்கு வேட்டி மற்றும் கைலி அணிந்து வர அனுமதியில்லை என்றும் தெரிவித்தனர்.
அதுமட்டுமல்லாமல் சிறிது நேரத்தில் எங்களிடம் பேச அதன் மேலாளர் வந்தார், இந்த சம்பவங்களை விடியோவாக பதிவிடக்கூடாது என்றும் எச்சரித்தார். ஒரு பொது இடத்தில் இதுபோன்று விடியோ பதிவுக்கு எந்தத் தடையும் இல்லாத சூழ்நிலையில் இது நடந்தது.
இதனால் நாங்கள் அந்த இடத்தில் இருந்து உடனடியாக வெளியேறிவிட்டோம். நம் நாட்டில் இதுபோன்ற சூழ்நிலை நடைபெறுவதை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன். என்னால் இனியும் பொறுமை காக்க முடியாது. நான் நிச்சயமாக இதில் சம்பந்தப்பட்டவர்களிடம் கேள்வி கேட்பேன் என்றார்.