அவசர கருத்தடை மாத்திரைக்கு சட்டப்பூர்வ அனுமதி உண்டு! ஆனால்..?

அவசர கருத்தடை மாத்திரை பற்றி பலரும் அறிந்திருப்போம். இது பற்றிய விளம்பரங்களும் ஊடகங்களில் வெளியானது. இந்த மாத்திரைக்கு சட்டப்பூர்வ அனுமதி பெறப்பட்டுள்ளதா என்றால்... பெறப்பட்டுள்ளது என்பதே பதில்.
அவசர கருத்தடை மாத்திரைக்கு சட்டப்பூர்வ அனுமதி உண்டு! ஆனால்..?
Updated on
1 min read


சென்னை: அவசர கருத்தடை மாத்திரை பற்றி பலரும் அறிந்திருப்போம். இது பற்றிய விளம்பரங்களும் ஊடகங்களில் வெளியானது. இந்த மாத்திரைக்கு சட்டப்பூர்வ அனுமதி பெறப்பட்டுள்ளதா என்றால்... பெறப்பட்டுள்ளது என்பதே பதில்.

ஆனால், சென்னையில் சில மருந்து கடைகளில் அவசர கருத்தடை மாத்திரை என்று கேட்பவர்களுக்கு, "அது விற்பனைக்கு இல்லை. அது சட்டப்பூர்வ அனுமதி பெறவில்லை" என்று பதில் வருகிறது.

உண்மை என்னவென்று 'எக்ஸ்பிரஸ்' நேரடியாக அலசியது. அதில் கிடைத்த விஷயங்கள் அப்படியே உங்களுக்காக...

இது குறித்து தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு நிர்வாக இயக்குநர் கே. சிவ பாலன் கூறிய விளக்கத்தில், "இளம்பருவத்தில் ஏற்படும் கர்ப்பத்தை தடை செய்வதில் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது. பல்வேறு பாதுகாப்பு விஷயங்களை தொடர்ந்து சோதித்து அறிமுகப்படுத்தப்பட்ட அவசர கருத்தடை மாத்திரைக்கு சட்டப்பூர்வமாக அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவரின் பரிந்துரை இன்றி இந்த மாத்திரையை வாங்க முடியாது" என்றார்.

"இந்த மாத்திரையை தயாரிக்கும் சில மருந்து நிறுவனங்கள், இதில் ஸ்டீராய்டை சேர்க்கின்றன. அதனால், ஒருவர் இந்த மாத்திரையை வாங்க வேண்டும் என்றால், நிச்சயம் மருத்துவரின் பரிந்துரை அவசியம்" என்றும் தெரிவித்தார்.

"சட்டப்பூர்வ அனுமதி பெற்றிருந்தாலும், இந்த மாத்திரை குறித்து தமிழகத்துக்குள் விளம்பரப்படுத்த வேண்டாம் என்று மாநில அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. இந்த மாத்திரை வாங்கும் அளவு மிகவும் குறைவாக இருப்பதால் தமிழகத்திலும் சில குறிப்பிட்ட மருந்து கடைகள் மட்டுமே இதனை விற்பனைக்கு வைத்துள்ளன" என்கிறார் சென்னை வேதியியல் கழகத்தைச் சேர்ந்த கே. நடராஜன் கூறியுள்ளார்.

மேலும், "சில இளம் நுகர்வோருக்கு தார்மீக அடிப்படையில் இந்த மருந்தினை மருந்துக்கடைக்காரர்கள் மறுக்கிறார்கள். ஏன் என்றால், இந்த மாத்திரையில் சேர்க்கப்படும் விஷயங்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி வழிப்புணர்வு இல்லாத இளம் வயதினர் இந்த மாத்திரையை தவறாகப் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது என்பதால்" என்று கூறினார்.

இந்த மாத்திரையில் இருக்கும் ஸ்டீராய்ட்ஸ் மற்றும் ஹார்மோன் மாற்றத்துக்கான மருந்துகள், தொடர்ந்து பயன்படுத்தும் போது மிக மோசமான பக்கவிளைவை ஏற்படுத்தும். இந்த மாத்திரையைப் பயன்படுத்திய சில பெண்கள், மாதவிடாயின் போது அதிக ரத்தப்போக்கு, மயக்கம், களைப்பு போன்ற பல பிரச்னைகளை எதிர்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

"இந்த மாத்திரையை அதிக முறை பயன்படுத்துவது மிக மோசமான உடல்நலக் குறைபாடுகளை ஏற்படுத்திவிடும். ஒரே ஒரு முறை பயன்படுத்த மட்டுமே இந்த மாத்திரை உகந்தது. அதுவும் மருத்துவரின் பரிந்துரையோடு பயன்படுத்த வேண்டும்" என்று ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் பணியாற்றும் மகப்பேறு மருத்துவர் எச். அனிதா கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com