/

குடியரசுத் தலைவர் தேர்தல்: வேட்புமனு தாக்கலில் தொடரும் ரொக்கப் பரிமாற்றம்

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு, மின்னணு ரொக்கப் பரிமாற்றத்தை மத்திய அரசு ஊக்குவித்தபோதிலும், குடியரசுத் தலைவராக விரும்பும் நபர், வைப்புத் தொகையாக,

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:47 pm

DIN

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு, மின்னணு ரொக்கப் பரிமாற்றத்தை மத்திய அரசு ஊக்குவித்தபோதிலும், குடியரசுத் தலைவராக விரும்பும் நபர், வைப்புத் தொகையாக, ரூ.15,000-ஐ ரொக்கமாகச் செலுத்த வேண்டியுள்ளது.
தேர்தல் விதிகளின்படி, குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், தனது வேட்புமனுவை தாக்கல் செய்யும்போது, தேர்தல் அதிகாரியிடம் ரூ.15,000-ஐ ரொக்கமாக செலுத்த வேண்டும். தேர்தல் அதிகாரியுடன் இருக்கும் வங்கி அதிகாரி ஒருவர், வேட்பாளர் செலுத்தும் தொகையை எண்ணி, சரிபார்ப்பார். இதுதவிர, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், அந்த வைப்புத் தொகையை ரிசர்வ் வங்கியிலும் செலுத்தலாம். பின்னர், அதற்கான ரசீதை வேட்புமனுவுடன் இணைத்து அவர், தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆனால், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், வைப்புத் தொகையை காசோலையாகவோ அல்லது வங்கி அட்டையைப் பயன்படுத்தியோ செலுத்த முடியாது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல், அடுத்த மாதம் 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்தப் பதவிக்காக, இதுவரை 15 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களில், போதிய ஆவணங்கள் இல்லாததால், 7 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு விட்டன. எஞ்சிய 8 வேட்பாளர்களும், 50 ஆதரவாளர்கள் மற்றும் வாக்காளர்களின் கையெழுத்துகளைப் பெற்றுத் தரவில்லை. எனவே, வேட்புமனு பரிசீலனையின்போது, அவர்களுடைய வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.