புதுதில்லி: நாடு முழுவதும் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், கடந்த ஆண்டு பண மதிப்பு நீக்க காலத்தில் தாங்கள் டெபாசிட்டாக பெற்ற 500 மற்றும் 1000 ருபாய் நோட்டுகளை, ஆர்.பி.ஐயில் டெபாசிட் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக நேற்று மத்திய அரசு கெசட்டில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு:
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் மீதான பண மதிப்பு இழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நவமபர் 10 முதல் 14 வரையிலான ஐந்து நாட்களில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய நோட்டுக்களை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.
நவம்பர் 14-ஆம் தேதிக்குப் பிறகு இத்தகைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட்டாகப் பெறக் கூடாது என்று வங்கிகளுக்குஅறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட நோட்டுக்கள் இதுவரை ஆர்.பி.ஐ வசம் டெபாசிட் செய்யப்படாமல் இருந்தது. அவ்வாறு உள்ள நோட்டுக்களை தற்பொழுது டெபாசிட் செய்யலாம். இந்த நோட்டுக்கள் ஆர்.பி.ஐயின் 'குறிப்பிடத்தக்க ரூபாய் நோட்டுக்கள் சட்டம்-2017' -ன் கீழ் டெபாசிட் செய்யப்படும்.
அதே நேரம் இந்த டெபாசிட்டுகள் தொடர்பாக மத்திய அரசானது உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே உறுதி அளித்துள்ளபடி, சம்பந்தப்பட்ட கணக்குகளின் உண்மைத்தன்மை தெளிவாக சோதனை செய்யப்பட்ட பின்னரே இதுகுறித்து வங்கிகளால் முடிவுகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
இத்தகைய சோதனைகள் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை மேற்கொள்ளப்பட்டு, எல்லா கணக்குகளும் விதிமுறைகளுக்கு உட்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த டெபாசிட்டுகளானது அறிவிப்பு வெளியான செவ்வாய் கிழமையிலிருந்து 30 நாட்களுக்குள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த அறிவிப்பின் மூலம் வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களும், டிசம்பர் 30, 2016-க்கு முன்னர் தாங்கள் டெபாசிட்டாக பெற்ற 500 மற்றும் 1000 ருபாய் நோட்டுகளை , ஆர்.பி.ஐயில் டெபாசிட் செய்யலாம் என்றும் அந்த அறிவிப்பில் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.