இம்பால்: மணிப்பூர் சட்டப்பேரவையில் இன்று நடக்கவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவின் பிரேன்சிங் தலைமையிலான அரசு தனது பெரும்பான்மையை தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த மணிப்பூர் சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் காங்கிரஸ் 28 இடங்களிலும், பா.ஜனதா 21 இடங்களிலும் வெற்றி பெற்றன. தனிப் பெரும்பானமைக்குத் தேவையான 30 இடங்களை பிடிக்க, காங்கிரசுக்கு வெறும் 3 இடங்கள் மட்டுமே தேவைபட்டது. ஆனாலும் இதர சிறிய கட்சிகள் ஆதரவுடன் பாரதீய ஜனதா 33 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றது.
இதையடுத்து மணிப்பூரில் பாரதீய ஜனதா ஆட்சி அமைந்தது. மாநில முதல்வராக பிரேன் சிங் கடந்த 15 ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன் ஆதரவுக் கட்சியான தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த ஜாய் குமார் துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் கவர்னரின் நஜ்மா ஹெப்துல்லா தெரிவித்துள்ளபடி இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது என்று முதல்வர் பிரேன் சிங் முடிவு செய்துள்ளார்.
காங்கிரசுக்கு வெறும் மூன்று இடங்கள் மட்டுமே தேவைப்படுவதால் இன்று நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பு பலத்த எதிர்பார்ப்பை அரசியல் பார்வையாளர்களிடம் ஏற்படுத்தி உள்ளது.