

சண்டிகார்: ஆசிரியர் பணி நியமனத்தில் நடந்த ஊழல் தொடர்பாக தில்லி திகார் சிறையில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா, தனது 82 ஆம் வயதில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா. இந்திய தேசிய லீக் கட்சியினைச் சேர்ந்தவர். தன்னுடைய ஆட்சிக்கு காலத்தில் நடைபெற்ற ஆசிரியர் பணி நியமன ஊழல் விவகாரத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவர் தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்பொழுது சிறையிலிருந்தவாறே தேசிய திறந்த நிலை பள்ளி அமைப்பின் மூலமாக நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இது தொடர்பாக அவரது இரண்டாவது மகனும், இந்திய தேசிய லீக் கட்சியின் மூத்த தலைவருமான அபய் சிங் சவுதாலா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எனது தந்தையின் சிறு வயதில் குடும்ப சூழ்நிலை காரணமாக அவரால் பள்ளிப்படிப்பை தொடர இயலவில்லை. அதனால் தற்போது தனக்கு கிடைத்துள்ள நேரத்தை அவர் பயனுள்ள முறையில் செலவழிக்க விரும்பினார். எனவே தற்பொழுது சிறையிலிருந்தவாறே தேசிய திறந்த நிலை பள்ளி அமைப்பின் மூலமாக நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். அத்துடன் மேலும் பி.ஏ வகுப்பிலும் அவர் சேர்ந்து படிக்க ஆசைபப்டுகிறார் என்று அபய் தெரிவித்துள்ளார்.
இதில் அவருக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியவராக குறிப்பிடபடுபவர் தில்லி திகார் சிறையில் அவருக்கு அடுத்த அறையில் அடைக்கப்பட்டுள்ள மனு ஷர்மா. மாடல் அழகி ஜெஸ்ஸிகா லால் என்பவரை 1999-ஆம் ஆண்டு கொன்ற வழக்கில், கைது செய்யயப்பட்டு சிறையில் உள்ள ஷர்மா, சிறையில் இருந்தவாறே சட்டபடிப்பை படித்து வருகிறார். அவரைப் பார்த்தே சவுதாலாவும் படிக்க எண்ணினார் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.