/

கால்நடை விற்பனை தடைக்கு எதிராக புதிய சட்டம்: கேரள அரசு பரிசீலனை

பசு, எருமை, காளை ஆகிய கால்நடைகளை இறைச்சிக்காக விற்பனை செய்வதற்கு தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக புதிய சட்டத்தைக் கொண்டு வருவது குறித்து கேரள அரசு பரிசீலித்து வருகிறது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:37 pm

DIN

பசு, எருமை, காளை ஆகிய கால்நடைகளை இறைச்சிக்காக விற்பனை செய்வதற்கு தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக புதிய சட்டத்தைக் கொண்டு வருவது குறித்து கேரள அரசு பரிசீலித்து வருகிறது.
இறைச்சிக்காக பசு, எருமை, எருது, காளை, ஒட்டகம் ஆகிய கால்நடைகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு கடந்த சனிக்கிழமை தடை விதித்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு மாநில அரசுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக, இந்த தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதத்தில், "கேரள மக்கள் எந்த உணவை உட்கொள்ள வேண்டும் என மத்திய அரசு தீர்மானிக்க தேவையில்லை' என பினராயி விஜயன் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த உத்தரவை செல்லாததாக்கும் வகையில் புதிய சட்டம் ஒன்றைக் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக கேரள உள்துறை அமைச்சர் கே.டி. ஜலீல் தெரிவித்துள்ளார்.
கருப்பு தினம்: இதனிடையே, மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திங்கள்கிழமை (மே 29) கருப்பு தினமாக அனுசரிப்பது என்று அந்த மாநில காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
காங்கிரஸ் நிர்வாகி மீது வழக்கு: இந்நிலையில், மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக கேரள இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்ணனூரில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, ஒரு கன்றுக்குட்டியை இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் பொது இடத்தில் வைத்து வெட்டினார். இந்த விடியோ வலைதளங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான புகாரின்பேரில் அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.