அன்னிய முதலீட்டு வாரிய செயல்பாட்டில் எனது குடும்பத்தினர் தலையிடவில்லை: ப.சிதம்பரம்

அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் (எஃப்ஐபிபி) செயல்பாடுகளில் தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தலையிட்டிருப்பதற்கோ அல்லது ஆதிக்கம் செலுத்தியிருப்பதற்கோ வாய்ப்பே இல்லை என்று மத்திய முன்னாள்
அன்னிய முதலீட்டு வாரிய செயல்பாட்டில் எனது குடும்பத்தினர் தலையிடவில்லை: ப.சிதம்பரம்
Published on
Updated on
1 min read

அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் (எஃப்ஐபிபி) செயல்பாடுகளில் தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தலையிட்டிருப்பதற்கோ அல்லது ஆதிக்கம் செலுத்தியிருப்பதற்கோ வாய்ப்பே இல்லை என்று மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கார்த்தி சிதம்பரம் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுக்கும் விதமாக இக்கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.
அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி "ஐஎன்எக்ஸ் மீடியா' என்ற நிறுவனத்துக்கு சாதகமான வகையில் சில காரியங்களை சாதித்துக் கொண்டதாக கார்த்தி மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதற்காக அந்த வாரியத்தின் செயலாளர்கள் 6 பேருக்கு அவர் நெருக்கடி கொடுத்ததாகவும் கூறப்பட்டது.
இந்தச் சூழலில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான வீடுகளிலும், அலுவலகங்களிலும் அண்மையில் சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டனர். இதைத்தொடர்ந்து கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் வெளியாகி வரும் நிலையில், அவற்றை மறுக்கும் வகையில் ப.சிதம்பரம் சில விளக்கங்களைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் என்பது மத்திய அரசு செயலகங்களால் இயக்கப்பட்டு வந்த ஓர் அமைப்பாகும். மத்திய பொருளாதாரத் துறைச் செயலர் அந்த வாரியத்துக்கு தலைவராக இருந்தார். அவரைத் தவிர தொழில் துறை, வர்த்தகம், வெளியுறவுத் துறை, வெளிநாடுவாழ் இந்தியர் விவகாரங்கள் துறை ஆகியவற்றைச் சேர்ந்த செயலர்களும் அந்த வாரியத்தில் முக்கியப் பொறுப்பு வகித்தனர்.
மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் ஐவரும், நீண்ட அனுபவம் கொண்ட ஐஎஃப்எஸ் (வெளியுறவு) அதிகாரி ஒருவரும் அதில் தலைமை நிர்வாகப் பொறுப்பில் இருந்தனர்.
அந்த வாரியம் தரப்பில் ஒரு பரிந்துரை முன்வைக்கப்படுவதென்றால், அதற்கு முன்னர் இளநிலை அதிகாரிகள், கூடுதல் செயலர், தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் என அனைவரது பரிசீலனைக்கும், ஆய்வுக்கும் உட்படுத்தப்படும்.
அதன் பிறகே அமைச்சரின் கவனத்துக்கு அந்தப் பரிந்துரைகள் கொண்டுவரப்படும். எனவே, அதில் தன்னிச்சையாக எவரும் ஆதிக்கம் செலுத்திவிட முடியாது.
மத்திய அமைச்சராக இருந்தபோது துறைரீதியாக நான் எடுத்த முடிவுகள் எதிலும் எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தலையிடுவதற்கு இடமளிக்கவில்லை.
அதேபோன்று எனது அமைச்சகத்தின் கீழ் உள்ள அதிகாரிகளிடம் அவர்கள் செல்வாக்கு செலுத்தவும் நான் வாய்ப்பளிக்கவில்லை. அத்தகைய துணிச்சல் எவருக்கும் இருந்தது கிடையாது.
இந்த உண்மை என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் தெரியும். ஆனால், அண்மைக் காலமாக என்னைப் பற்றியும், எனது குடும்பத்தினரைப் பற்றியும் வேண்டுமென்றே சில அவதூறுகள் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பரப்பப்படுகின்றன.
கார்த்தி சிதம்பரம் மீதான முதல் தகவல் அறிக்கையின் நகல் கூட சமூக வலைத்தளத்தில் திட்டமிட்டு பரப்பப்படுகிறது. சொல்லப்போனால், அதனை நானே பதிவிறக்கம் செய்தேன். இத்தகைய விஷயங்கள் சென்னையில் இருந்தே கசிகின்றன என்று அந்த அறிக்கையில் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com