தைவான் நாட்டின் தைஹாகுவில் கடந்த 1945-ஆம் ஆண்டு நேரிட்ட விமான விபத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்து விட்டார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நேதாஜி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கொல்கத்தாவைச் சேர்ந்த நபர் ஒருவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் விவரம் கோரியிருந்தார். அதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அளித்திருக்கும் பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
நேதாஜி மரணம் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட பல்வேறு ஆணையங்கள் அளித்த அறிக்கைகளில், நேதாஜி விமான விபத்தில்தான் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை அடிப்படையாகக் கொண்டு, மத்திய உள்துறை அமைச்சகம் இந்த முடிவுக்கு வந்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் கும்நாமி பாபா என்ற புனைப்பெயரில் நேதாஜி வாழ்ந்தார் என்று அவரது ஆதரவாளர்கள் நம்பினர். இதுகுறித்து முகர்ஜி ஆணையம் விசாரணை நடத்தி, கும்நாமி பாபாவை நேதாஜி அல்ல என்று தெரிவித்தது என்று அந்தப் பதிலில் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியபோது, பொது தளத்தில் ஏற்கெனவே நேதாஜி மரணம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டிருப்பதை அடிப்படையாக வைத்தே பதில் அளிக்கப்பட்டுள்ளதாகவும், நேதாஜி மரணம் தொடர்பாக மத்தியில் ஆட்சியில் இருந்த அரசுகள் ஏற்கெனவே ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் தாக்கு: இதனிடையே, நேதாஜி மரணத்தை அடிப்படையாக வைத்து, மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி, புதிய சதியை தீட்டுவதாகவும், வரலாற்றை திருத்தி எழுத முயற்சிப்பதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியும், நேதாஜி மாயமானது குறித்து நாட்டு மக்களுக்கு மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு தவறான தகவலை அளிப்பதாக விமர்சித்துள்ளது. 'முகர்ஜி ஆணையத்தால், நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், எப்படி மத்திய அரசு இந்த முடிவுக்கு வந்தது? இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை விளக்க வேண்டும். இல்லையெனில் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும்' என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.