தில்லியில் காற்றின் தரம் மேம்பாடு: தடை உத்தரவுகள் விலக்கப்பட்டன

தலைநகர் தில்லியில் காற்றின் தரத்தில் சற்று மேம்பாடு அடைந்துள்ளதன் காரணமாக, அண்மையில் அறிவித்த அவசரகால நடவடிக்கைகளான பல்வேறு தடை உத்தரவுகளை சுற்றுச்சூழல்
தில்லியில் காற்றின் தரம் மேம்பாடு: தடை உத்தரவுகள் விலக்கப்பட்டன
Updated on
1 min read

தலைநகர் தில்லியில் காற்றின் தரத்தில் சற்று மேம்பாடு அடைந்துள்ளதன் காரணமாக, அண்மையில் அறிவித்த அவசரகால நடவடிக்கைகளான பல்வேறு தடை உத்தரவுகளை சுற்றுச்சூழல் மாசு தடுப்பு, கட்டுப்பாடு ஆணையம் (இபிசிஏ) விலக்கிக் கொண்டுள்ளது. 
தலைநகர் தில்லியில் ஒரு வாரத்திற்கு முன்பு காற்றில் மாசு மிகவும் மோசமான நிலையில் இருந்தது. 
தில்லியிலும், தேசியத் தலைநகர் வலையத்திலும் பனிமூட்டத்துடன் நச்சுப் புகையும் சேர்ந்து காணப்பட்டது. இதனால், பொதுமக்கள் மூச்சுவிடுவதற்கு சிரமமடைந்தனர். கண்ணில் நீர்வழிதல், எரிச்சல் போன்ற பாதிப்புகளுக்கும் உள்ளாகினர்.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் மாசு தடுப்பு, கட்டுப்பாடு ஆணையம் பல்வேறு அவசரகால நடவடிக்கைகளை அறிவித்தது. 
குறிப்பாக கட்டுமானங்களுக்கும், நகரில் லாரிகள் நுழைவதற்கும் தடை விதித்து உத்தரவிட்டது. 
அதேபோன்று, நகரில் வாகன நிறுத்துமிடக் கட்டணங்களை அதிகரிக்கவும் அறிவுறுத்தியது. காற்றின் தரம் அவசரகால பிரிவில் இருந்ததால் நவம்பர் 8-ஆம் தேதி தரவரிசை பதிலி செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக இபிசிஏ அறிவித்திருந்தது.
இந்நிலையில், சுற்றுச்சூழல் மாசு தடுப்பு, கட்டுப்பாடுஆணையத் தலைவர் புரே லால் வியாழக்கிழமை தில்லி, உத்தர பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். 
அதில், தில்லி, என்சிஆர் பகுதிகளில் காற்றின் தரம் மேம்பாடு அடைந்துள்ளதால், ஏற்கெனவே எடுக்கப்பட்ட அவசரகால நடவடிக்கைகளை உடனடியாக விலக்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். 
எனினும், தரவரிசை பதிலி செயல் திட்டத்தின் கடுமையான பிரிவின் கீழ் பதர்பூர் அனல் மின் நிலையத்தை மூடுவது, செங்கல் சூளைகளுக்கு தடை விதிப்பது, சிமெண்ட் கலவை, கல்பொடி ஆலைகள் ஆகியவற்றுக்கான தடையை தொடர்ந்து நீடிப்பது என்று இபிசிஏ தெரிவித்துள்ளது.
இதனிடையே, தேசியத் தலைநகர் வலய (என்சிஆர்) பகுதிகளில் கட்டுமானச் செயல்பாடுகள், தொழில் நடவடிக்கைகள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவது தொடர்பாக வெள்ளிக்கிழமை (நவம்பர் 17) முடிவு செய்யப்படும் என்று தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் கூறியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com