ரியல் எஸ்டேட் துறையினை ஜிஎஸ்டி  வரம்புக்குள் கொண்டு வர விரைவில் பரிசீலனை: அருண் ஜேட்லி

ரியல் எஸ்டேட் துறையினை ஜிஎஸ்டி  வரம்புக்குள் கொண்டு வருவது பற்றி விரைவில் பரிசீலனை செய்யப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
ரியல் எஸ்டேட் துறையினை ஜிஎஸ்டி  வரம்புக்குள் கொண்டு வர விரைவில் பரிசீலனை: அருண் ஜேட்லி
Published on
Updated on
1 min read

மசாசூசெட்ஸ் (அமெரிக்கா): ரியல் எஸ்டேட் துறையினை ஜிஎஸ்டி  வரம்புக்குள் கொண்டு வருவது பற்றி விரைவில் பரிசீலனை செய்யப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தற்பொழுது அமெரிக்காவில் உள்ளார். அங்குள்ள ஹார்வார்ட் பல்கலைகழகத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் 'மஹிந்திரா வருடாந்திர உரை' நிகழ்வில் இம்முறை 'இந்தியாவின் வரி சீர்திருத்தங்கள்' என்ற தலைப்பில் அவர் இன்று உரை நிகழ்த்தினார். அப்பொழுது அவர் குறிப்பிட்டதாவது:

இந்தியாவில் தற்பொழுது வரை அதிக அளவில் பணம் புழங்கும் ஒரு இடமாகவும், அதே சமயம் அதிக அளவில் வரி ஏய்ப்பு நடைபெறும் இடமாகவும் திகழ்வது ரியல் எஸ்டேட் துறைதான். அதே தருணம் அது தற்பொழுது வரை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வரப்படவில்லை.

சில மாநிலங்கள் அந்த துறை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கின்றன. தனிப்பட்ட முறையில் நானும் ரியல் எஸ்டேட் துறை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வரப்பட அவசியம் இருப்பதாகவே கருதுகிறேன்.

எனவே அடுத்த மாதம் 9-ஆம் தேதி அசாம் மாநிலம் கெளஹாத்தியில் நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டத்திலேயே இது பற்றி விவாதிக்க உள்ளோம். சில மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கின்றன.எனவே ஆலோசனையின் மூலமாக ஒரு தெளிவான முடிவுக்கு வரலாம்.

இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் பொருளின் இறுதிக்  கட்டத்தில் ஒரு 'இறுதி வரி' மட்டும் செலுத்தினால்  போதுமானது. ஒட்டுமொத்தமாக பார்க்கும் பொழுது செலுத்தும் அந்த வரியும் பொருட்படுத்தும் அளவில் இருக்காது.

இத்தகைய செயல்பாடுகளின் மூலம் தனியாகச் செயல்படும் 'நிழல் பொருளாதாரம்' முற்றிலுமாக ஒழிக்கப்படும். எனவே விற்பனையின் பொருட்டு கட்டி முடிக்கப்படும் கட்டிடங்கள் மற்றும் வணிக வளாகங்கள் ஆகியவற்றிற்கு 12% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். அதே சமயம் நிலம் மற்றும் இதர அசையாச் சொத்துக்கள் போன்றவற்றிற்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

இவ்வாறு ஜேட்லி தன்னுடைய உரையில் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com