மத்தியப் பிரதேச மாநிலத்தின் ரைஸின் என்ற இடத்தில் சிறிய அளவிலான கடை வைத்து வியாபாரம் செய்து வருபவர் ஹஸீப் ஹிந்துஸ்தானி. இவரது கனவு இருசக்கர வாகனம் பிரபல ஹிரோ ஹோண்டா நிறுவனத்தின் ஸ்ப்ளென்டர் (Splendor) ஆகும்.
இந்நிலையில், அவரது இந்த கனவு இருசக்கர வாகனத்தை வாங்குவதற்காக அதன் மொத்த தொகையையும் சில்லறையாகக் கொடுத்து அப்பகுதி டீலரை திக்குமுக்காட வைத்துள்ளார். முதலில் அதனைப்பெற டீலர் மறுத்தாலும் பின்னர் அதன் காரணம் அறித்து சம்மதித்தார்.
தன்னுடைய கிராமத்தில் சிறிய அளவிலான கடை வைத்து பிழைப்பு நடத்தி வருபவர் ஹஸீப். அவருக்கு இந்த இருசக்கர வாகனத்தை வாங்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாக இருந்து வந்தது. இதற்காக அவர் ஒரு முடிவை எடுத்தார்.
அதன்படி தான் சம்பாதிக்கும் தொகையில் இருந்து தினமும் சேமித்து வந்துள்ளார். அவரது இந்த லட்சியத்துக்கு குடும்பத்தாரும் ஒத்துழைப்பு அளித்தனர். மொத்தம் 10 போர் கொண்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இதற்காக சேமிக்கத் துவங்கினர்.
எனவே அந்த இருசக்கர வாகனத்தை வாங்க வேண்டும் என்பது ஹஸீப்பின் மொத்த குடும்பத்தின் விருப்பமாக மாறியது. இதையடுத்து அவர்கள் அனைவரும் கடந்த 3 வருடங்களாக சேர்த்து வைத்த மொத்தத் தொகையும் அந்த இருசக்கர வாகனம் வாங்கும் அளவுக்கு இருந்தது.
தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், அதனைச் சிறப்பாகக் கொண்டாடும் விதமாக அந்த இருசக்கர வாகனத்தை வாங்க ஹஸீப் முடிவெடுத்தார். எனவே தான் சேர்த்து வைத்திருந்த சில்லறைகளை ரூ.1, ரூ.2, ரூ.5 மற்றும் ரூ.10 என பிரித்து எடுத்துச் சென்றார்.
முதலில் இதனை வாங்க மறுத்த டீலரும் அவரது இந்த பின்னணி தெரிந்த பின் சம்மதித்தனர். அதில் மொத்தம் 14,600 ஒரு ரூபாய் நாணயங்களும், 15,645 இரண்டு ரூபாய் நாணயங்களும், 1,458 ஐந்து ரூபாய் நாணயங்களும், 322 10 ரூபாய் நாணயங்களும் இருந்தன.
இதையடுத்து அந்த இருசக்கர வாகனத்தின் விலையான அவரது மொத்த சேமிப்பு ரூ.56,400-ஐ வழங்கி தனது வாகனத்தைப் பெற்றுச் சென்றார். கடந்த 3 வருடங்களுக்கு முன்னால் பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது சிறிய பொருட்களின் மதிப்பு குறித்து விளக்கினார். பிரதமர் மோடியின் அந்த கருத்துதான் எங்களுக்கு முன்மாதிரியாக அமைந்தது. தற்போது எங்கள் குடும்பத்தின் இலக்கு வெற்றி அடைந்ததில் மகிழ்ச்சி என ஹஸீப் தெரிவித்தார்.