ஆதார் எண்ணை இணைக்காததால் அரிசி மறுப்பு: பசியால் 11 வயது சிறுமி உயிரிழந்த கொடூரம்!
சிம்தேகா: ஜார்க்கண்ட்டில் குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காத குடும்பத்தினருக்கு அரிசி மறுக்கப்பட்டதால் பட்டினியால் 11 வயது சிறுமி உயிரிழந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் சிம்தேகா மாவட்டத்தில் குடும்ப அட்டையுடன் 12 இலக்க ஆதார் எண் இணைக்கப்படாத குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்க மறுக்கப்பட்டதால், தயார் உணவளிக்க முடியாததால் பட்டினியால் செப்டம்பர் 28-ஆம் தேதி 11 வயது பெண் சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சேகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மகளை இழந்த தாய் கோவில் தேவி கூறுகையில், அரிசி பெறுவதற்காக ரேஷன் கடைக்கு சென்றாள். அங்கு ஆதார் எண் இணைக்காத குடும்ப அட்டைக்கு அரிசி வழங்கப்படாது என திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால் எனது 11 வயது மகள் பட்டினியால் உயிரிழந்துவிட்டதாக திங்கள்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து ஜார்கண்ட் உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சரயு ராய் கூறியதாவது: ஆதார் அட்டை இல்லாதவர்கள் உச்ச நீதிமன்ற உத்தரவின் பிரதியுடன் ரேஷன் பொருட்களை பெறலாம் என நான் தெளிவாகக் கூறியுள்ளேன். அவ்வாறு அடையாளம் காணப்பட்ட பிறகு அவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கலாம் என தெரிவித்துள்ளதாக கூறினார்.
மேலும், "ஆதார் எண் இணைக்கப்படாததால் உணவு பொருட்கள் வழங்காத காரணத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளதால், காரணமானவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்" என்று அவர் கூறியுள்ளார்.
மோசடி வழக்குகள் அதிகரித்து வருவதால், பாதுகாப்பு காரணங்களுக்காக, ஒவ்வொரு நபரும் தங்கள் ஆதார் எண்ணை குடும்ப அட்டை, சமையல் எரிவாயு அட்டை, பான் கார்டு அல்லது வேறு ஏதேனும் ஒன்றுடன் இணைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.