சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் ராஜிநாமா
மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் தனிப்பட்ட காரணங்களைக் குறிப்பிட்டு தன் பதவியை வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தார்.


மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் தனிப்பட்ட காரணங்களைக் குறிப்பிட்டு தன் பதவியை வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தார்.
மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு மே மாதம் பதவியேற்றது. அதைத் தொடர்ந்து, அப்போதைய சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் தன் பதவியை ராஜிநாமா செய்தார். அந்தப் பதவிக்கு உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞரான ரஞ்சித் குமார் அதே ஆண்டு ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார். அவருக்கு நடப்பு ஆண்டு (2017) ஜூன் மாதம் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக இப்பதவியை வகித்து வந்த அவர், ரூபாய் நோட்டு வாபஸ், அதிகரித்து வரும் மாசு ஆகியவற்றுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் அரசின் சார்பில் வாதிட்டுள்ளார்.
இந்நிலையில், சொலிசிட்டர் ஜெனரல் பதவியை ரஞ்சித் குமார் வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தில் "சில தனிப்பட்ட குடும்பப் பிரச்னைககள் காரணமாக எனது பதவியை ராஜிநாமா செய்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். தாம் பதவி விலகியதை அவர், "இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழின் செய்தியாளரிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனிடையே, ரஞ்சித் குமாரின் ராஜிநாமா கடிதம் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் அலுவலகத்துக்கு கிடைக்கப் பெற்றதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், அமைச்சர் தற்போது பஹாமாஸ் நாட்டில் நடைபெறும் அதிகாரபூர்வ நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றுள்ளதாகவும் அவர் வரும் 22-ஆம் தேதி நாடு திரும்பிய பிறகே இந்த விவகாரம் குறித்து முடிவெடுப்பார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் பதவியை முகுல் ரோத்தகி ராஜிநாமா செய்த சில மாதங்களுக்குப் பிறகு, சொலிசிட்டர் ஜெனரல் பதவியில் இருந்து ரஞ்சித் குமார் தற்போது விலகியுள்ளார். அரசியல்சாசன சட்டங்கள், மத்திய அரசுப் பணிச் சேவைகள், வரிவிதிப்பு ஆகியவை தொடர்பான வழக்குகளில் நிபுணரான ரஞ்சித்குமார் ஏற்கெனவே குஜராத் அரசின் வழக்குரைஞராகப் பணியாற்றியுள்ளார். உச்ச நீதிமன்றத்துக்கு பல்வேறு வழக்குகளில் உதவி புரிந்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சார்பில் பெங்களூரு நீதிமன்றத்திலும், சொராபுதீன் என்கவுன்ட்டர் வழக்கில் குஜராத் அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்திலும் ரஞ்சித்குமார் ஆஜராகி வாதாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...