புதுதில்லி: பயனாளர்கள் தங்கள் மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவினை, அவசர மனுவாக கருதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
இந்தியாவில் அதிக அளவில் போலி முகவரிச் சான்றுகள் செலுத்தி சிம் கார்டுகள் வாங்கப்படுவதாகவும், அவை மூலம் சமூக விரோதிகள் மற்றும் பயங்கரவாதிகள் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் மத்திய அரசு கருதியது. எனவே இதை தடுக்கும் பொருட்டு வாடிக்கையாளர்களின் மொபைல் என்னுடன் அவர்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது.
இந்த நிபந்தனையானது புதிய இணைப்பு பெறுபவர்களுக்கு மட்டுமின்றி ஏற்கனவே உபயோகப்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டது.
எனவே மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளுமாறு தொலை தொடர்பு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு கோரிக்கை விடுத்து குறுஞ்செய்திகளை அனுப்பி வருகிறது.
இந்நிலையில் பயனாளர்கள் தங்கள் மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்ற அறிவிப்புக்கு எதிராக உச்ச நீதின்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த மனு நீதிபதிகள் இன்று செல்லமேஸ்வர் மற்றும் அப்துல் நசீர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
ஆனால் மனுவினை அவசர மனுவாக கருதி விசாரிக்க உச்ச நீதிமன்ற அமர்வு மறுத்து விட்டது, இதே போன்ற வழக்குகள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன் விசாரணைக்கு வர உள்ளதாக குறிப்பிட்ட அவர்கள், ஆதார் தொடர்பான பிற வழக்குகள் விசாரணை நடைபெறும் 30-ம் தேதி அன்று இந்த மனுவையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வழி செய்யும்படி நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டது.