உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை கடந்த இரண்டு மாதங்களில் 60 ஆயிரத்துக்கும் குறைவாக குறைந்துள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது குறித்து உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாடு முழுவதும் உச்ச நீதிமன்றம் உள்பட மற்ற அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிக்கும் விதமாக இருந்தது. மொத்தமாக சுமார் 3 கோடி வழக்குகளில் இயங்கி வருகிறது நீதிமன்றங்கள். அந்த வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பலனாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 60 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.
நீதிபதி தீபக் மிஸ்ரா ஆகஸ்ட் 28-ஆம் தேதி இந்தியாவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற போது, உச்ச நீதிமன்றத்தில் 57,774 வழக்குகள் நிலுவையில் இருந்தன. இரண்டு மாதங்களில் 2,174 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டதன் மூலம் குறைக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 28 மற்றும் அக்டோபர் 27க்கு இடையில் காலத்தில் புதியதாக 7021 வழக்குகள் பதிவானதாகவும், 9195 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017 மே.1-ஆம் தேதி முதல் உச்ச நீதிமன்றத்தில் மொத்த வழக்குகளின் நிலுவையில் 60,751 வழக்குகள் இருந்தன, இதில், 39 வழக்குள் அரசியலமைப்புச் சட்ட விதிகள் சம்மந்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ். கெஹார், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், வருடாந்திர கோடைகால விடுமுறை இடைவேளையின் போது சில நாட்கள் வழக்குகளை விசாரிக்கும்படி கேட்டுக் கொண்டனர். அதன்படி கடந்த கோடைகால விடுமுறையின் போது, உச்ச நீதிமன்றம் அரசியலமைப்புச் சட்ட அமர்வு வழக்குகளை விசாரித்தது குறிப்பிடத்தக்கது.