

லக்னோ: இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் உயிர்கொல்லி அரக்கனாக விளங்கும் 'ப்ளூ வேல்' விபரீதத்தினை தடுக்கும் பொருட்டு, லக்னோ நகர பள்ளிகளில் மாணவர்கள் மொபைல் போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் 130-க்கும் மேற்பட்ட இளைஞர்களின் உயிரைப் பறித்த ஆபத்தான ஆன்லைன் விளையாட்டான 'ப்ளூ வேல்' தற்பொழுது இந்தியாவிலும் சில இளம் உயிர்களைப் பழிவாங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக உத்தர பிரதேச மாநில தலைநகரான லக்னோவின் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த ஆதித்யன் வர்தன் என்ற 14 வயது சிறுவன், கடந்த வாரம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.
இதனைத் தொடர்ந்து மாணவர்களை இந்த அபாய விளையாட்டிலிருந்து காக்க மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது குறித்து மாவட்ட பள்ளிகள் ஆய்வாளர் முகேஷ் குமார் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பள்ளிகளில் மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக அவ்வப்பொழுது மாணவர்களிடம் நடவடிக்கை தொடர்பாக தொடர் சோதனைகள் நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏதேனும் நடத்தை வித்தியாசம் தென்பட்டால் அவர்கள் உடனே கண்காணிக்கப்பட்டு தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் அதே போல மாணவர்களின் செயல்பாடுகள் குறித்து கண்காணிக்குமாறு பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதே போல கடந்த வாரம் நேரிட்ட மாணவனின் தற்கொலையினைத் தொடர்ந்து மாநிலக் காவல் துறை தலைவர் சுல்கான் சிங், மாவட்ட காவல்துறை தலைமை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, மாணவர்கள் இந்த ஆபத்தான விளையாட்டினை விளையாடுதில் இருந்து தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.