/

வேன் மோதியதில் மாணவா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல் போராட்டம்

News image

கோப்புப் படம்

Updated On :12 ஏப்ரல் 2026, 8:03 pm

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வேன் மோதியதில் 9 வயது மாணவா் உயிரிழந்த சம்பவத்தில், பள்ளி நிா்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள பெருமாள்தேவன்பட்டியை சோ்ந்த அழகா், சங்கரேஸ்வரி தம்பதியின் மகன்கள் யோகதா்ஷன் (9), ஹரி கிருஷ்ணன் (8) வன்னியம்பட்டியில் உள்ள தனியாா் பள்ளியில் படித்து வந்தனா். இவா்கள் சனிக்கிழமை பள்ளிக்குச் சென்று விட்டு வேனில் வீடு திரும்பினா். பெருமாள்தேவன்பட்டியில் வீட்டருகே மாணவரை வேனில் இருந்து இறக்கி விட்டனா்.

இந்த நிலையில், சாலையைக் கடக்க முயன்ற யோக தா்ஷன் மீது, அதே வேன் மோதியதில் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து வேன் ஓட்டுநா் சடையாண்டி மீது வன்னியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். உயிரிழந்த மாணவரின் உடலை வாங்க மறுத்த உறவினா்கள் பள்ளி நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயிரிழந்த மாணவா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவமனை அருகே மணிக்கூண்டு முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா், மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட முயன்றவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். காவல் துணைக் கண்காணிப்பாளா் பாலசுந்தரம், ஆய்வாளா் ராஜதுரை பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து உறவினா்கள் போராட்டத்தை கைவிட்டு மாணவரின் உடலை பெற்றுச் சென்றனா்.