இந்து மதத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் எந்த மதத்தினராக இருந்தாலும், பத்மநாபசுவாமி கோயிலுக்கு வருவதில் எந்தவித தடையும் இல்லை என கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்தார்.
பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து, திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்க செல்லும் தேவாரகெட்டு சரஸ்வதி அம்மன் பவனி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவர், திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
இந்து மதத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பத்மநாபசுவாமி கோயிலுக்கு செல்வதில் எவ்வித தடையும் இல்லை. பின்னணி பாடகர் ஜேசுதாஸ் இக்கோயிலுக்கு வருவதாக விருப்பம் தெரிவித்துள்ளார் எனக் கூறப்படுகிறது. பத்மநாபசுவாமி கோயிலை நிர்வாகம் செய்பவர்களும் தடை எதுவும் கூறாமல் அவர் வருவதை ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறோம் என்றார் அவர்.
கேரள தொல்லியல் துறை அமைச்சர் கடகம்பள்ளி ராமசந்திரன் கூறியதாவது:
பத்மநாபபுரம் அரண்மனையில் ரூ. 3 கோடி செலவில் அதி நவீன வசதிகளுடனும், கலை வேலைப்பாடுகளுடனும் கூடிய வரவேற்பு அறை கட்டப்பட்டு வருகிறது. மேலும் அரண்மனையைச் சுற்றி கட்டடங்கள் இல்லாத பகுதிகளில் பூங்கா மற்றும் தோட்டங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பத்மநாபபுரம் அரண்மனையை சுற்றியுள்ள கோட்டைச் சுவர்கள் சேதமடைந்துள்ளதாகக் கூறுகின்றனர் . இது தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே இதை பராமரிக்க தமிழக அரசும், கேரள அரசும் கலந்தாலோசித்து மத்திய அரசிடம் ஒரு திட்ட வரைவு கொடுக்க தீர்மானிக்க உள்ளோம் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.