கேரளாவில் அதிர்ச்சியூட்டும் தொடர் கொலைகள்: குற்றவாளியின் திகிலூட்டும் வாக்குமூலம்

கேரள மாநிலம் பினராயி பகுதியைச் சேர்ந்த சௌமியா, தனது மகள்கள் மற்றும் பெற்றோருக்கு விஷம் கொடுத்துக் கொலை செய்த குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவில் அதிர்ச்சியூட்டும் தொடர் கொலைகள்: குற்றவாளியின் திகிலூட்டும் வாக்குமூலம்
Updated on
1 min read


கன்னூர்: கேரள மாநிலம் பினராயி பகுதியைச் சேர்ந்த சௌமியா, தனது மகள்கள் மற்றும் பெற்றோருக்கு விஷம் கொடுத்துக் கொலை செய்த குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெற்றோர் மற்றும் குழந்தைகளைக் கொலை செய்ததாக கடந்த செவ்வாயன்று கைது செய்யப்பட்ட சௌமியா (28) தலசேரி குற்றவியல் முதன்மை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 2 வாரம் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

சௌமியாவிடம் தொடர்ந்து 10 மணி நேரம் நடந்த விசாரணையில், தனது பெற்றோர் குன்ஹிகண்ணன் (76), கமலா (68), மகள்கள் ஐஸ்வர்யா (9), கீர்த்தனா (1) ஆகியோரை விஷம் வைத்துக் கொன்றதை ஒப்புக் கொண்டுள்ளார். அதில், முதல் 3 பேரையும் தானே திட்டமிட்டுக் கொன்றதாகவும், ஆனால் கீர்த்தனாவின் மரணம் இயற்கையாக நிகழ்ந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி ஐஸ்வர்யாவும், மார்ச் 7ம் தேதி கமலாவும், ஏப்ரல் 13ம் தேதி குன்ஹிகண்ணனும், பிறகு கீர்த்தனாவும் ஒன்றன் பின் ஒருவராக உயிரிழந்துள்ளனர். 

இவர்களது மரணம் ஒன்றுபோல இருந்ததால், அக்கம் பக்கத்தினருக்கும், உறவினர்களுக்கும் சந்தேகம் எழுந்தது. இதில் சௌமியாவின் உறவினர் ஒருவர் காவல்நிலையத்தில் புகார்  அளித்துள்ளார்.

வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையிடம், சௌமியா முன்னுக்குப் பின் முரணாக தகவல் அளித்துள்ளார். உடனடியாக சௌமியாவை கைது செய்து விசாரணைக் காவலில் எடுத்தனர். அவரிடம் முறைப்படி நடத்திய விசாரணையில்,  முதலில் முரண்டு பிடித்த சௌமியா, பிறகு, எலி விஷத்தை அவர்கள் சாப்பிடும் உணவில் கலந்து அவர்களைக் கொன்றதாக ஒப்புக் கொண்டார்.

உயிரிழந்தவர்களின் உடலில் இருந்து அலுமினியம் போஸ்பைட் (எலி விஷம் தயாரிக்கப் பயன்படுவது) கலந்திருப்பது மருத்துவ ஆய்வில் தெரிய வந்ததை அடுத்து உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. 

இந்த கொலைகளைச் செய்ய காரணம் என்ன என்பது குறித்து சௌமியா கூறியிருந்த வாக்குமூலத்தில், தனது தகாத உறவு குறித்து மகள் ஐஸ்வர்யா தெரிந்து கொண்டதாகவும், அவர் அது பற்றி தனது தாய் கமலாவிடமும் கூறிவிட்டதால், விஷம் கொடுத்து மகளைக் கொன்றுவிட்டு நாடகம் ஆடியதும், அப்போது யாருக்கும் தன் மீது சந்தேகம் வராததால், தொடர்ந்து தனது பெற்றோரையும் அதுபோல கொலை செய்ததாகவும் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com