/

ஏர் இந்தியா நிறுவன பங்குகள் முழுமையாக விற்பனை செய்யப்பட மாட்டாது

பொதுத் துறைக்குச் சொந்தமான ஏர் இந்தியாவின் முழு பங்குகளையும் விற்பனை செய்யும் திட்டமில்லை என்று மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்

News image
Updated On :3 ஆகஸ்ட் 2018, 1:17 am IST


பொதுத் துறைக்குச் சொந்தமான ஏர் இந்தியாவின் முழு பங்குகளையும் விற்பனை செய்யும் திட்டமில்லை என்று மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.
இதுதொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் வியாழக்கிழமை எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
ஏர் இந்தியாவின் பங்குகளை முழுவதுமாக விற்பனை செய்யும் திட்டம் இல்லை. அதேநேரம், பங்குகளை விற்பனை செய்யும் முடிவிலிருந்து மத்திய அரசு பின்வாங்கவில்லை. ஏர் இந்தியாவின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டுவருவது, செலாவணி மதிப்பில் ஏற்ற, இறக்கம் காணப்படுவது ஆகியவற்றின் காரணமாக முதலீட்டாளர்கள் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை. இந்தப் பிரச்னைகள் சரியான பிறகு, பங்குகளை விற்பனை செய்வது குறித்து மீண்டும் பரிசீலிக்கப்படும். நிறுவனத்தின் முழு பங்குகளும் விற்பனை செய்யப்பட மாட்டாது.
கடந்த 2007-ஆம் ஆண்டில் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்ததிலிருந்து ஏர் இந்தியா நஷ்டத்தை சந்தித்து வருகிறது.
தொழிலில் ஏற்பட்ட போட்டி, விமான நிலையத்தை பயன்படுத்துவதற்கான கட்டணம் அதிகரித்தது உள்ளிட்ட காரணங்களால் ஏர் இந்தியாவுக்கு இழப்பு ஏற்பட்டது என்று அந்தப் பதிலில் ஜெயந்த் சின்ஹா குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக, ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முன்வந்தது. பங்குகளை வாங்குவதற்கான கடைசி தேதி மே 30-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. அந்தக் காலக்கெடுவுக்குள் கடன் பிரச்னையில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியாவின் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் முன்வராதது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.