2019 மக்களவை தேர்தலுக்கு ஆதரவு திரட்ட பாஜக-வின் தேசிய தலைவர் அமித்ஷா இந்திய கிரிக்கெட் வீரர் தோனியை தில்லியில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார்.
2019 மக்களவை தேர்தலுக்கு பாஜக 'சம்பார்க் சே சமார்த்தன்' என்ற பிரச்சாரப் பணியை செயல்படுத்தி வருகிறது. இந்த பிரச்சாரம் என்பது, பாஜக நிர்வாகிகள் மக்களை நேரில் சந்தித்து கட்சியின் 4 ஆண்டுகால ஆட்சி சாதனைகளை எடுத்துக் கூறி விளக்கமளித்து ஆதரவு திரட்ட வேண்டும். இந்த பிரச்சாரம் மூலம் ஒவ்வொரு பாஜக நிர்வாகியும் குறைந்தபட்சம் தலா 10 பேரையாவது நேரில் சந்திக்க வேண்டும்.
அதன் பகுதியாக பாஜக-வின் தலைவர்கள் பிரபலங்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். பாஜக-வின் தேசிய தலைவர் அமித்ஷாவும் இதனை தீவிரமாக செயல்படுத்தி வருகிறார். அவர், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, யோகா குரு ராம்தேவ் உள்ளிட்ட பலரை தொடர்ந்து சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
அதன்படி, அவர் ஞாயிற்றுக்கிழமை இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியை தில்லியில் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்த சந்திப்பின் போது மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும் உடனிருந்தார்.