வெளியுறவு துறை அமைச்சகத்தின் பெயருக்கு மாறுகிறது ஜின்னா இல்லம்

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள ஜின்னா இல்லத்தை, வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் பெயருக்கு மாற்றும் பணி நடைபெற்று வருவதாக அந்த துறையின் அமைச்சர்

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST


மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள ஜின்னா இல்லத்தை, வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் பெயருக்கு மாற்றும் பணி நடைபெற்று வருவதாக அந்த துறையின் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் உருவாக முக்கிய காரணமாக இருந்த முகமது அலி ஜின்னா, மும்பையில் உள்ள மலபார் ஹில் பகுதியில் உள்ள இல்லத்தில் 1930-களின் இறுதியில் வசித்து வந்தார். அவர் வசித்த அந்த இல்லத்தை கலாசார மையமாக அறிவிக்கக் கோரி அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு மலபார் ஹில் தொகுதி பாஜக எம்எல்ஏ மங்கள் பிரபாத் லோதா கடந்த அக்டோபர் மாதம் கடிதம் எழுதியிருந்தார்.
அதற்கு பதிலளித்து கடந்த 5-ஆம் தேதி லோதாவுக்கு சுஷ்மா கடிதம் அனுப்பினார். அதில், ஜின்னா இல்லத்தை புதுப்பிக்குமாறு பிரதமர் அலுவலகம் எங்கள் அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. தில்லியில் உள்ள ஹைதராபாத் அரசு இல்லத்தைப் போல ஜின்னா இல்லத்தை மாற்றியமைக்குமாறும் உத்தரவு வந்தது. அதையடுத்து, இந்திய கலாசார கவுன்சிலின் பெயரில் இருக்கும் ஜின்னா இல்லத்தை, வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் பெயருக்கு மாற்றுவதற்கான ஒப்புதல் கேட்டு பிரதமர் அலுவலகத்திடம் விண்ணப்பித்திருந்தோம். அவர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர். அதைத்தொடர்ந்து ஜின்னா இல்லத்தின் உரிமையை மாற்றுவதற்கான பணி நடைபெற்று வருகிறது என்று அந்த கடிதத்தில் சுஷ்மா கூறியிருந்தார்.
சுஷ்மாவின் கடிதம் குறித்து செய்தியாளர்களிடம் புதன்கிழமை மங்கள் பிரபாத் லோதா கூறுகையில், சுஷ்மா எழுதிய கடிதத்தின் மூலமாக ஜின்னா இல்லம் குறித்து பேசப்பட்ட அனைத்து சர்ச்சைகளும் முடிவுக்கு வந்துள்ளன என்றார்.
முன்னதாக, ஜின்னாவின் மகள் தினா வாடியா அந்த இல்லம் தனக்கு சொந்தமானது என்று வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது இறப்புக்கு பிறகு, அவரது மகன் அந்த வழக்கைத் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அந்த இல்லத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் கோரிக்கை விடுத்து வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.