ஜம்மு - காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) துணை ஆய்வாளர் ஒருவர் பலத்த காயமடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
ரஜெளரி மற்றும் பூஞ்ச் பகுதியில் அந்நாட்டுப் படையினர் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவரும், மூன்று வீரர்களும் உயிரிழந்தனர். அதன் பின்னரும், சிறிய ரக குண்டுகளை வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் பாகிஸ்தான் தாக்குதல்களைநடத்தி வருவது இரு தரப்புக்கும் இடையே போர்ச் சூழலை உருவாக்கியுள்ளது.
இதையடுத்து, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், எல்லையோர கிராமங்களில் இருக்கும் 84 பள்ளிகளுக்கு மூன்று நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ரஜெளரி மாவட்ட ஆணையர் சாஹித் இக்பால் செளதரி, செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
எல்லையில் பாகிஸ்தான் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக இந்தியத் தரப்பிலும் பதிலடி தரப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லையோர கிராமங்களில் இருக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தாக்குதலில் இதுவரை பொது மக்கள் எவருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
அதேபோன்று கிராமங்களில் இருந்து பாதுகாப்பான இடம் தேடி மக்கள் புலம் பெயருவதாகவும் அதிகாரப்பூர்வ செய்திகள் எதுவும் வெளியாகவில்லை.
பாகிஸ்தான் படைகள் ஞாயிற்றுக்கிழமை இரவு அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் எல்லைப் பாதுகாப்புப் படை துணை ஆய்வாளர் (எஸ்.ஐ.) ஒருவர் காயமடைந்தார். அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.