சத்தீஸ்கரில் ராமன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு நீரவ் மோடி விவகாரம் தொடர்பாக அம்மாநில முதல்வர் ராமன் சிங்கிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த 30 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் திங்கள்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
சத்தீஸ்கரில் ரியோ டின்டோ சுரங்க நிறுவனம் முதலீடு செய்வது தொடர்பாக அம்மாநில முதல்வர் ராமன் சிங் அவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மேலும், அந்த நிறுவனம் தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 11,400 கோடி ஊழல் செய்த நீரவ் மோடியின் நிறுவனத்துடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக பேரவையில் அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 30 பேரை இடைநீக்கம் செய்து பேரவைத் தலைவர் கௌரிஷங்கர் அகர்வால் நடவடிக்கை மேற்கொண்டார்.
மொத்தம் 90 இடங்களைக் கொண்ட சத்தீஸ்கர் பேரவையில் 49 உறுப்பினர்களைக் கொண்ட பாஜக ஆளும்கட்சியாக உள்ளது. 39 உறுப்பினர்கள் கொண்ட காங்கிரஸ் அங்கு எதிர்கட்சியாக செயல்படுகிறது.