

வங்கிகளில் ரூ.3,695 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ரோட்டோமாக் நிறுவனத்தின் தலைவர் விக்ரம் கோத்தாரி, அவரது மகன் ராகுல் ஆகியோரை சிபிஐ வியாழக்கிழமை கைது செய்தது.
முன்னதாக, தில்லியில் அமைந்துள்ள சிபிஐ அலுவலகத்தில் புதன்கிழமை நேரில் ஆஜரான விக்ரம் கோத்தாரியிடம் பல மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் செயல்பட்டு வரும் ரோட்டோமாக் பேனா நிறுவனத்தின் தலைவர் விக்ரம் கோத்தாரி. இவர், வங்கிகளில் கடன் வாங்கி விட்டு, திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்திருப்பதாக பரோடா வங்கி நிர்வாகம், சிபிஐயிடம் அண்மையில் புகார் அளித்தது. அதனடிப்படையில் சிபிஐ விசாரணையைத் தொடங்கியது. முதலில் அவர், ரூ.800 கோடி மோசடி செய்ததாக மதிப்பிடப்பட்டது. அதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், பல்வேறு தகவல்கள் வெளியாகின.
பேங்க் ஆஃப் இந்தியா (ரூ.754.77கோடி), பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா (ரூ.49.82 கோடி), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ரூ.771.07 கோடி), யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (ரூ.458.95 கோடி), அலாகாபாத் வங்கி (ரூ.330.68 கோடி), ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் (ரூ.97.47 கோடி), பேங்க் ஆஃப் பரோடா (ரூ.456.63 கோடி) ஆகிய 7 வங்கிகளில் அவர் ரூ.2,919 கோடி கடன் பெற்றதும், அதைத் திருப்பிச் செலுத்தாததால், தற்போது, வட்டியும், அசலுமாகச் சேர்த்து ரூ.3,695 கோடி கடன் ஏய்ப்பு செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, விக்ரம் கோத்தாரி, அவரது மனைவி சாதனா கோத்தாரி, மகன் ராகுல் கோத்தாரி மற்றும் வங்கி அதிகாரிகள் சிலர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.