ராஜஸ்தான் மாநிலத்தின் 2 நாடாளுமன்ற மற்றும் ஒரு சட்டமன்ற தொகுதிகளுக்கு ஜனவரி 29-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
அம்மாநிலத்தின் அஜ்மீர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சன்வர்லால் ஜட், அல்வர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சந்த் நாத், மண்டல்கிரக் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கீர்த்தி குமாரி ஆகியோரது மரணத்தை தொடர்ந்து இங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இவர்கள் அனைவரும் அங்கு ஆளும் பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இதையடுத்து இங்கு நடைபெறுகிற இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநில தலைமை தேர்தல் அதிகாரி அஸ்வினி பகத், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்த 3 இடங்களுக்குமான இடைத்தேர்தலை அமைதியான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளேன். அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இம்முறை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளரின் பெயர், சின்னம் ஆகியவற்றுடன் அவரது புகைப்படத்தையும் இணைக்கவுள்ளோம்.
இதன்மூலம் ஒரே பெயர் கொண்ட வேட்பாளர்களுக்கு இடையிலான குழப்பத்தினை நீக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
முன்னதாக, டோல்பூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் இதேபோன்று வேட்பாளரின் புகைப்படத்துடன் கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டது.
இருந்தபோதிலும் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு இதுபோன்று பயன்படுத்துவது இதுவே முதன்முறையாகும் என்றார்.