

ரேபெரேலி: தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு மிரட்டுபவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி, பிரதமர் மோடிக்கு இளம்பெண் ஒருவர் ரத்தத்தால் கடிதம் எழுதிய சம்பவம் தெரிய வந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ரேபெரேலி மாவட்டத்தினைச் சேர்ந்த பாரபங்கி என்னும் இடத்தில், பொறியியல் கல்லூரி மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வைத்து அந்த பெண்ணை மிரட்டுவதாக, 24.03.2017 அன்று திவ்யா வர்மா மற்றும் அங்கித் பாண்டே ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பின்னர் சில மாதங்கள் கழித்து 2017 அக்டோபர் மாதத்தில் குறிப்பிட்ட இளம்பெண் பெயரில் போலியான முகநூல் கணக்கினைத் துவக்கி ஆபாச புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்வதாக, அடையாள தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த தகவல்களை எல்லாம் மாவட்ட காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் சஷி சேகர் சிங் தெரிவித்தார். இந்நிலையில் குறிப்பிட்ட அந்த இளம்பெண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு மிரட்டுபவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி, பிரதமர் மோடிக்கும் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் ரத்தத்தால் கடிதம் எழுதிய சம்பவம் தெரிய வந்துள்ளது.
ஜனவரி 20-ஆம் தேதியிட்டு எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது:
பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக நான் குறிப்பிட்டுள்ளவர்கள் அரசியல் தொடர்புடையவர்கள் என்பதால் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் தயங்குகிறது. வழக்கினை வாபஸ் பெறுமாறு அவர்கள் தொடர்ந்து என்னை மிரட்டி வருகிறாரகள்.எனக்கு கண்டிப்பாக நீதி கிடைக்க வேண்டும் அல்லாவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன்.
காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் சஷி சேகர் சிங்கிடம் இது குறித்துக் கேட்ட பொழுது தனக்கு அந்த கடிதம் குறித்து எதுவும் விபரம் தெரியாது என்று தெரிவித்தார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.