

பெங்களூர்: 2017ம் ஆண்டில், பெங்களூருவில் தினமும் சராசரியாக 5 பேர் தற்கொலை செய்த கொண்டிருப்பதாக அம்மாநில அரசு வெளியிட்டிருக்கும் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் 2017ம் ஆண்டில் தற்கொலைகள் அதிகரித்திருப்பதும், அதாவது இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே ஆண்டில் 1,921 பேர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதில் 1,268 பேர் ஆண்கள், 653 பேர் பெண்கள். 2016ல் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 1,795 ஆகவும், 2015ல் 1,855 ஆகவும் இருந்துள்ளது.
யுவா உதவி மையத்தில் கவுன்சிலராக பணியாற்றும் ஹர்ஷிதா கூறுகையில், ஒவ்வொரு வாரமும் குறைந்தது 5 தொலைபேசி அழைப்புகள் வரும். மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் இருப்பவர்களுக்கு நாங்கள் நம்பிக்கைக் கொடுத்து அவர்களது எண்ணத்தில் இருந்து மாற்றுவோம். அதில் பதின்மவயதினரே அதிகம். கல்வியில் தோற்றவர்கள், பெற்றோரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாதவர்களே அதிகம் என்கிறார்.
எந்த வயதினர் அதிகம் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று மருத்துவர் மகேஷ் ஆர் கௌடாவிடம் கேட்டதற்கு, 25 முதல் 65 வயதுடையவர்கள்தான் பொதுவாக தற்கொலை செய்து கொள்வார்கள். ஆனால், தற்போது 14 வயது சிறார்கள் கூட தற்கொலை செய்து கொள்கிறார்கள். தற்கொலை செய்து கொள்ளும் பெரும்பாலானோரின் பிரச்னையாக, மனநலப் பிரச்னையே உள்ளது. மன அழுத்தம் அல்லது ஏதேனும் ஒரு விஷயத்துக்கு அடிமையாக இருப்பது போன்றவையும் காரணங்களாக அமைந்து விடுகின்றன என்கிறார்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும். அவர்கள் மன அழுத்தத்தில் இருக்கிறார்களா என்பதை அறிந்து உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.
2017ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டவர்களில் ஆண்களே அதிகம் என்றும், அதில் 1,617 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.