

புது தில்லி: 2017ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக மரண தண்டனை விதிப்பது குறைந்திருந்தாலும், பலாத்காரம் செய்து கொன்றவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை அதிகரித்துள்ளது.
பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு 2017ம் ஆண்டில் வழங்கப்பட்ட மரண தண்டனை குறித்த புள்ளி விவரங்களை தேசிய சட்ட பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
அதாவது, 2017ம் ஆண்டில் செஷன்ஸ் நீதிமன்றங்களால் மரண தண்டனை வழங்கப்படுவது 27 சதவீதம் குறைந்திருப்பதாகவும், அதே சமயம், பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படுவது அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'இந்தியாவில் மரண தண்டனை, 2017ம் ஆண்டுக்கான புள்ளி விவரம்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கும் புள்ளி விவர அறிக்கையில், 2016ம் ஆண்டில் அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை 149 பேருக்கு வழங்கப்பட்ட நிலையில், 2017ல் 109 பேருக்கு மட்டுமே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
செஷன்ஸ் நீதிமன்றங்களால் மரண தண்டனை விதிக்கப்பட்ட 109 பேரில், உயர் நீதிமன்றத்தால் 53 பேருக்கு மட்டுமே தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில், 35 பேருக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது.
அதே போல, 2017ம் ஆண்டில் பலாத்காரத்தில் ஈடுபட்டு கொலை செய்த குற்றவாளிகள் 43 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் 19 வழக்குகள் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குற்றங்களாகும்.
இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 67 சிறைக் கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது 2016ல் 47 ஆக இருந்தது.
2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் 371 சிறைக் கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.