சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவுக்கு, பார்வையாளர்கள் சந்திப்பில் விதிகளை மீறி சலுகைகள் வழங்கப்பட்டதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சசிகலாவுக்கு பார்வையாளர்கள் சந்திப்பில் விதிகளை மீறி சலுகைகள் வழங்கப்பட்டதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
இது தொடர்பாக தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றின் சார்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கர்நாடக சிறைத்துறை ஐ.ஜி அலுவலகத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் முதலாவதாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு அவர்களது உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பார்வையாளர்களை சந்திக்கும் விதிமுறைகளைப் பற்றி முதல் மனுவில் கேட்கப்பட்ட கேள்விக்கு, கைதிகள் பார்வையாளர்களை 15 நாட்களுக்கு ஒருமுறைதான் சந்திக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது
பின்னர் சசிகலா கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி அன்று சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து அவரை சந்தித்தவர்களின் விபரங்கள் இரண்டாவது மனுவில் கேட்கப்பட்டிருந்தன. அவற்றில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சசிகலாவுக்கு, பார்வையாளர்கள் சந்திப்பில் விதிகளை மீறி சலுகைகள் வழங்கப்பட்டதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
உதாரணத்திற்கு 16.02.2017 ஆண்டு சசிகலாவை அவரது வழக்கறிஞர் அசோகன் சிறைக்குச் சென்று சந்தித்துள்ளார். ஆனால் இருநாட்கள் இடைவெளியில் 18.02.2017 அன்று அவரது உறவினர் விவேக் ஜெயராமன் சென்று சந்தித்துள்ளார். அதேபோல 08.03.2017 அன்று டிடிவி தினகரன் சிறையில் சசிகலாவினைச் சந்தித்துள்ளார். பின்னர் அவரே 15 நாட்கள் இடைவெளிக்கு முன்னதாக 20.03.17 அன்றும் சசிகலாவைச் சந்தித்துள்ளார்
இதே வரிசையில் பலரும் அவரை சிறை விதிமுறைகளுக்கு மாறாக சென்று சந்தித்து வந்துள்ள விபரங்கள் அந்த கடிதத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. அதேசமயம் பார்வையாளர் ஒருவரை கைதிகள் சந்திக்கும் அதிகபட்ச நேரமாக 30 முதல் 45 நிமிடங்கள் இருக்கிறது. ஆனால் கடந்த 28.12.17 அன்று ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு சசிகலாவைச் சந்தித்த டிடிவி தினகரன் அவருடன் மூன்று மணி நேரங்களுக்கும் மேலாக பேசிக்கொண்டிருந்ததாக ஆங்கில நாளிதழ் ஒன்று விரிவான செய்தி வெளியிட்டிருந்தது.
இவ்வாறு பார்வையாளர்கள் சந்திப்பு மற்றும் சந்திப்பு நேரம் ஆகியவற்றில் சசிகலாவுக்கு சிறை விதிகளை மீறி கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டதா என்ற கேள்விகள் தற்பொழுது எழுந்துள்ளது.