
என் மீது அபத்தமான குற்றச்சாட்டை சுமத்த சிபிஐ-க்கு நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளதாக ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சிபிஐ வியாழக்கிழமை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் முன்னாள் மத்திய நிதி அமைசச்ர் ப. சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உட்பட 18 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து சிதம்பரம் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், அவர் கூறியதாவது,
"என் மீதும், அதிகாரிகள் மீதும் உள்ள நற்பெயரை கெடுப்பதற்காக இதுபோன்ற அபத்தமான குற்றச்சாட்டை சுமத்த சிபிஐ-க்கு நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. அங்கு வழக்கு கடுமையாக நடைபெறும். இனிமேல் கருத்து எதுவும் தெரிவிக்கமாட்டேன்" என்றார்.
இதற்கிடையில் காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் இதுதொடர்பாக கூறுகையில், "சிபிஐ மற்றும் இந்த அரசிடம் இருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும். மற்ற குற்றப்பத்திரிகைகளின் முடிவுகளை தான் இந்த குற்றப்பத்திரிகையும் சந்திக்கவுள்ளது. 2ஜி வழக்கு என்ன ஆனது, அனைவரும் விடுதலை ஆனார்கள். அதே தான் நடக்கும்" என்றார்.
வழக்கு விவரம்:
கடந்த 2006-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனமானது, ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது.
இந்த முதலீடு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக சிபிஐயும், அமலாக்கத் துறையும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் பெயர் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.