உத்தரப் பிரதேசத்தில் ரயில்வேயில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக 8 பேரை சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை கைது செய்தனர்.
இதற்காக ரயில்வே இணையதளம் போன்று போலியாக ஒரு இணையதளத்தையும் அவர்கள் உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் ரயில்வேயில் குரூப் சி மற்றும் டி பிரிவு பணிகளுக்கு ஆளெடுப்பதாகக் கூறி ஏராளமானவர்களிடம் தலா 3 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர்.
இது தொடர்பாக தில்லி, லக்னெள, ஜெய்ப்பூர், ஆக்ரா உள்ளிட்ட நகரங்களில் மோசடியாளர்கள் நடத்த அலுவலங்கள் உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கிருந்து ஏராளமான போலி ஆவணங்கள், போலி முத்திரைகள், ரொக்கம், மோசடிக்கு பயன்படுத்திய கணினி, செல்லிடப்பேசி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
மோசடி செய்வது வெளியே தெரியாமல் இருப்பதற்காக ரயில்வேயில் நடப்பதுபோலவே ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெற்றுள்ளனர். மேலும், அரசு மருத்துவமனையில் இருந்து உடல் தகுதிச் சான்றிதழ் பெற்றுத் தரவும் கூறியுள்ளனர். ராஜஸ்தானைச் சேர்ந்த பெரும்பாலான இளைஞர்கள் இந்த மோசடியில் பணத்தை இழந்துள்ளனர். தேர்வு செய்யப்படவர்களின் பெயர்களையும் இணையதளத்தில் வெளியிடுவதாக அவர் கூறி நம்பவைத்துள்ளனர்.
லக்னெளவில் உள்ள சார்பங் ரயில் நிலையத்தில் உள்ள ஒரு அறையே அலுவலகமாக மாற்றி மோசடி செய்துள்ளனர். எனவே, பலரும் அவர்களை நம்பி பணம் கொடுத்துள்ளனர் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








