யமுனா நதியின் கொள்ளளவு அதன் அபாயகரமான 204 மீட்டரைக் கடந்து 204.83 மீட்டராக உயர்ந்துள்ளது. மேலும் வெள்ளிக்கிழமை தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் மழைப் பெய்த காரணத்தால் யமுனா நதியின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் விரைவில் 205.40 மீட்டர் அளவுக்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை வரை 1,87,272 கன அடியாக இருந்த யமுனா நதியின் நீர் வரத்து சனிக்கிழமை 1,93,607 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஹரியாணாவில் உள்ள ஹாதினி குந்த் பாரேஜ்ஜில் இருந்து 1,15,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
எனவே தாழ்வானப் பகுதிகளுக்கு தில்லி அரசு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள மக்களை உடனடியாக வெளியேறி வேறு இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளுக்காக கிழக்குப் பகுதியில் 17 படகுகளும், வெள்ள தடுப்பு பிரிவின் கீழ் 34 படகுகள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.