அதிக விமானங்களைக் கையாண்டு மும்பை விமான நிலையம் சாதனை!
இந்தியாவிலேயே அதிகமாக விமானங்களைக் கையாண்டு மும்பை சர்வதேச விமான நிலையம் சாதனைப் படைத்துள்ளது. ஒற்றை ஓடுபாதை கொண்ட மும்பை விமான நிலையமே உலகின் மிக பரபரப்பாக இயங்கும் விமான நிலையமாக மாறியுள்ளது.
இங்கு சராசரியாக 65 விநாடிகளுக்கு ஒரு விமானம் என்ற வகையில் தினமும் 837 விமானங்களை கையாண்டு வருகிறது. இதில், மணிக்கு சராசரியாக 48 விமானங்களையும், மிகவும் பரபரப்பான கால கட்டங்களில் அதிகபட்சம் 52 விமானங்களையும் கையாண்டு வருகிறது.
பயணிகளைக் கையாளும் எண்ணிக்கையிலும் மும்பை விமான நிலையமே முதலிடத்தில் உள்ளது. சென்ற நிதி ஆண்டில் மட்டும் அந்த விமான நிலையம் 4.52 கோடி விமானப் பயணிகளைக் கையாண்டது.
இங்கு கடந்தாண்டு டிசம்பர் 6-ஆம் தேதி 24 மணி நேரத்தில் 974 விமானங்களை கையாண்டு சாதனை படைத்தது. அதுபோல ஜனவரி 20-ஆம் தேதி 24 மணி நேரத்தில் 980 விமானங்களை கையாண்டு, தனது முந்தைய சாதனையை முறியடித்தது.
இந்நிலையில், மும்பை சர்வதேச விமான நிலையத்தின் வரலாற்றில் முதன்முறையாக ஜுன் 5-ஆம் தேதி 1,003 விமானங்களைக் கையாண்டு புது சாதனைப் படைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆயிரம் விமானங்களை கடந்தது இதுவே முதன்முறையாகும்.