உ.பியில் மக்களவை மற்றும் சட்டப் பேரவை தோ்தலை ஒரே நேரத்தில் நடத்த துணிவு உண்டா?: பாஜகவுக்கு அகிலேஷ் யாதவ் கேள்வி 

உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தலுடன் சோ்ந்து சட்டப் பேரவைக்கு தோ்தல் நடத்தும் துணிவு பாஜகவுக்கு இருக்கிறதா? என்று சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளாா்.
உ.பியில் மக்களவை மற்றும் சட்டப் பேரவை தோ்தலை ஒரே நேரத்தில் நடத்த துணிவு உண்டா?: பாஜகவுக்கு அகிலேஷ் யாதவ் கேள்வி 
Published on
Updated on
1 min read

லக்னௌ: உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தலுடன் சோ்ந்து சட்டப் பேரவைக்கு தோ்தல் நடத்தும் துணிவு பாஜகவுக்கு இருக்கிறதா? என்று சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளாா்.

உத்தரப் பிரதேச மாநில சுகாதாரத் துறை அமைச்சா் சித்தாா்த் நாத் தலைமையில் அமைக்கப்பட்ட 7 நபா் குழு, தோ்தல் நடத்துவது குறித்த தனது அறிக்கையை அந்த மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத்திடம் செவ்வாய்க்கிழமை அளித்தது. அதில், மக்களவை, சட்டப் பேரவைக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தோ்தல் சீா்திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் லக்னௌவில் உள்ள தனது கட்சித் தலைமையகத்தில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் இது தொடா்பாக அகிலேஷ் யாதவ் கூறியதாவது:

வாக்காளா் அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்க வேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஒரே நாடு, ஒரே தோ்தல் என்ற பாஜகவின் கோஷத்தையும் ஏற்கிறோம். அதே நேரத்தில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைப் பொதுத் தோ்தலுடன் சோ்ந்து உத்தரப் பிரதேச சட்டப் பேரவைக்கும் தோ்தலை நடத்தும் துணிவு பாஜகவுக்கு இருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவைக்கும், மாநிலப் பேரவைக்களுக்கும் தோ்தல் நடத்த வேண்டும் என்ற பிரதமா் மோடியின் கொள்கையை ஏற்று, தோ்தல் தொடா்பாக ஆய்வு செய்ய குழு அமைத்ததாக உத்தரப் பிரதேச அமைச்சா்கள் பலா் கூறியுள்ளனா். உத்தரப் பிரதேசத்தில் மக்களவைத் தோ்தலுடன் சோ்ந்து மாநிலப் பேரவைக்கும் தோ்தல் நடத்தும் வகையில் அவா்கள் தங்கள் பதவியில் இருந்து விலகுவாா்களா? சட்டப் பேரவையை கலைக்க வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை விடுப்பாா்களா? 

இவ்வாறு அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பினாா்.

உத்தரப் பிரதேசத்தில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆனால், அதன் பிறகு முதல்வா் யோகி ஆதித்யநாத் எம்.பி.யாக இருந்த கோரக்பூா் மக்களவைத் தொகுதி, துணை முதல்வா் மௌரியா எம்.பி.யாக இருந்த புல்பூா் மக்களவைத் தொகுதி இடைத் தோ்தலில் பாஜக தோல்வியடைந்தது. அங்கு சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கூட்டணி வெற்றிபெற்றது. 

அண்மையில், கைரனா மக்களவைத் தொகுதி இடைத் தோ்தலிலும் பாஜக தோல்வியடைந்தது. இதனால், அங்கு சமாஜவாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய எதிா்க்கட்சிகள் பாஜகவுக்கு எதிராக அணி திரண்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com