ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தவறாக வழிநடத்தப்பட்டதன் காரணமாக கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய அரசு முடிவு செய்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களின் எதிர்காலம் மீது கொண்டுள்ள அக்கறை காரணமாக இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இரண்டு நாள் பயணமாக வியாழக்கிழமை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வந்துள்ள ராஜ்நாத் சிங், ஜம்முவில் நடைபெற்ற விளையாட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, பாதுகாப்பு படையினருக்கு எதிராக கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபடும் இளைஞர்களின் நலனை மையப்படுத்தி ராஜ்நாத் சிங் பேசியதாவது:
குழந்தைகள் எங்கிருந்தாலும் அவர்கள் ஒரே மாதிரியானவர்கள் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். சில இளைஞர்கள் கல்லெறிவதற்காக தவறாக வழிநடத்தப்பட்டுள்ளார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
குழந்தைகள் தவறு செய்வது இயல்பு. எனவே தான், கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட்ட குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளை நாங்கள் திரும்பப் பெற முடிவு செய்திருக்கிறோம்.
வளர்ச்சிக்கான பாதையைத் தேர்வு செய்ய வேண்டும் என இளைஞர்களை நான் கேட்டுக் கொள்கிறேன். அழிவின் பாதையை அவர்கள் தேர்வு செய்யக் கூடாது.
ஜம்மு-காஷ்மீர் மக்களுக்காக பிரதமர் நரேந்திர மோடியின் இதயத்தில் மிக அதிகமான பாசம் இருக்கிறது. இங்குள்ள இளைஞர்களுக்கு ஒரு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கி தருவது எங்களது கடமை. இந்த மாநிலத்தில் விளையாட்டு போட்டிகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு நிதியுதவி செய்யப்படும். மன்சார் மற்றும் பாஹல்காமில் நீர் விளையாட்டு போட்டிகளை ஊக்குவிக்கவும் நிதியுதவி செய்யப்படும்.
ஜம்மு-காஷ்மீர் மாநில அரசுடன் இணைந்து இந்த மாநிலத்தின் எதிர்காலத்தை மாற்றியமைப்போம் என்றார் ராஜ்நாத் சிங்.
இந்த மாநிலத்தில் உள்ள விளையாட்டு சாதனையாளர்கள் பலரை ராஜ்நாத் சிங் கெளரவித்தார். இந்த விழா நடைபெற்ற மைதானத்தை சுற்றிலும் இருந்த சாலைகள் பாதுகாப்பு காரணங்களுக்காக அடைக்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் உள்ளிட்ட தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தைக்கு தயார்''
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும், பாகிஸ்தானிலும் சரியான சிந்தனை கொண்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
அதே சமயம், தமது மண்ணில் இருந்து தூண்டப்படும் பயங்கரவாத நடவடிக்கைகளை பாகிஸ்தான் தடுத்து நிறுத்த வேண்டும்; அப்படி தடுக்க முடியாவிட்டால் இந்தியாவின் உதவியை நாடலாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பாதுகாப்பு நிலவரம் குறித்து ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். பின்னர், ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
அனைவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தலாம். பேச்சுவார்த்தையில் பங்கேற்பவர்கள் ஒத்த கருத்துடையவர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால், நல்ல கருத்துடையவர்களாக இருக்க வேண்டும்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள அனைத்து தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கென சிறப்பு பிரதிநிதியை மத்திய அரசு நியமித்துள்ளது. அவரை வெறும் கண்துடைப்புக்காக நியமிக்கவில்லை. அவர் இதுவரை இங்கு 11 முறை வந்து சென்றுள்ளார் என்றார் ராஜ்நாத் சிங்.
ஜம்மு-காஷ்மீருக்கான மத்திய அரசின் பிரதிநிதியாக தினேஷ்வர் ஷர்மா கடந்த ஆண்டு அக்டோபர் முதல் செயல்பட்டு வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










