ஜம்மு-காஷ்மீர் மாநில பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னாவுக்கு பாகிஸ்தானில் இருந்து வியாழக்கிழமை கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானை கோழைகளின் நாடு என குறிப்பிட்டுள்ள ரவீந்தர் ரெய்னா இதுகுறித்து மேலும் கூறியதாவது:
நான் பாகிஸ்தானுக்கு எதிரான கருத்துக்களை கூறி வருவதால், கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தானின் லாஹூர், கராச்சி, ராவல்பிண்டி, முஸாஃபர்பாத் உள்ளிட்ட நகரங்களில் இருந்து எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
அதிலும் தற்போது குறிப்பாக ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பிறகு இதுபோன்ற கொலை மிரட்டல்கள் அதிகரித்துள்ளது. இப்போது கூட ஜம்மு-வில் நடைபெற்ற சர்வதேச யோகா தினத்தில் கலந்துகொண்டபோது கராச்சியில் இருந்து தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர், பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட ஷுஜாத் புஹாரிக்கு நடந்த அதே நிலைமை எனக்கும் நடக்கும் என்று மிரட்டியுள்ளான். இதுகுறித்து மாநில ஆளுநர் மற்றும் உரிய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன் என்றார்.